Published : 01 Jun 2015 07:36 AM
Last Updated : 01 Jun 2015 07:36 AM
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற பள்ளி ஆய்வக உதவியாளார் தேர்வை 7 லட்சத்து 31 ஆயிரத்து 844 பேர் எழுதினர்.
அரசு மேல்நிலை மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 362 பள்ளி ஆய்வக உதவியாளார் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான தேர்வு 1800 மையங்களில் நேற்று நடைபெற்றது.
இந்தப் பணிக்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்றாலும், பட்டதாரிகளும் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தில் விண்ணப்பித்திருந்த 8.87 லட்சம் பேரில் 82.5 சதவீதம் பேர் நேற்று தேர்வு எழுதினர்.
காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற தேர்வில் அறிவியல் மற்றும் பொது அறிவு கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்து மையங்களிலும் பாதுகாப்புக்காக போலீஸார் நியமிக்கப்பட்டிருந்தனர். அது தவிர மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களைக் கொண்ட பறக்கும் படை திடீர் ஆய்வுகள் மேற்கொண்டன.
சென்னையில் பெரம்பூர் டான் பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, அரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட 51 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இங்கு காலியாக உள்ள 33 பணியிடங்களுக்கு 19 ஆயிரத்து 900 பேர் தேர்வு எழுதினர்.
சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா இதுபற்றி கூறும்போது, “மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோர் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அது தவிர தேர்வு மையங்களில் தலா 2 போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்” என்றார். மாவட்ட ஆட்சியரும் தேர்வு மையங்களை பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT