Published : 11 Jun 2015 07:55 AM
Last Updated : 11 Jun 2015 07:55 AM

சென்னைக்கு கிருஷ்ணா நீர் மேலும் 5 நாட்களுக்கு திறப்பு: ஆந்திர மாநில அதிகாரிகள் அறிவிப்பு

சென்னைக்கு மேலும் 5 நாட் களுக்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்படும் என்று ஆந்திர அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து சென்னைக்கு கடந்த 1-ம் தேதி முதல் தண்ணீர் விடப்படுகிறது. ஜூன் 10-ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், தற்போது மேலும் 5 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

கண்டலேறு அணையிலிருந்து ஒரு நாளுக்கு 1000 கன அடி வீதம், 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், கண்டலேறுவிலிருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வரையிலான 152 கி.மீ. நீள கால்வாயில் குடிநீருக்காகவும், விவசாயத்துக்காகவும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதில் 150 கன அடி வரை குடிநீருக்காக எடுப்பதற்கு அனுமதி உள்ளதாக ஆந்திர அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், தமிழகத்தை வந்தடையும் கிருஷ்ணா நீரின் அளவு ஒரு நாளுக்கு சுமார் 200 கன அடி மட்டுமே. ஜூன் 4-ம் தேதி முதல் இதுவரை சுமார் 0.10 டி.எம்.சி நீர் வந்தடைந்துள்ளது.

இது குறித்து கண்டலேறு அணைக்கு பொறுப்பான ஆந்திர அதிகாரி ஒருவர் கூறியதாவது:

முதலில் ஜூன் 10-ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது தண்ணீர் நிறுத்துவதற்கான அரசு உத்தரவுகள் எதுவும் வரவில்லை. குறைந்தபட்சம் மேலும் 5 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். அதற்கு பிறகு, எத்தனை நாட்கள் என்று இரு மாநில அரசுகள் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தகவலை உறுதிப்படுத் தும் வகையில் சென்னை குடிநீர் வாரிய அதிகாரி கூறும்போது, “சென்னைக்கு இன்னும் எத்தனை நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று உறுதியாக கூறப்படவில்லை. ஆனால், தண்ணீரை நிறுத்தவதற்கான உத்தரவுகளோ, தகவலோ இல்லை. எனவே, மேலும் சில நாட்கள் தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x