

டாஸ்மாக் மதுபானக்கடை நேரம் குறைப்பு தொடர்பாக ‘வாட்ஸ் ஆப்’ பில் பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும், சில அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும் மதுவிலக்கை அமல் படுத்த முதல்கட்டமாக டாஸ் மாக் மதுக்கடையில் பார் நேரத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் முன்னரே, அவர் பதவியேற்றதும் ‘டாஸ்மாக் நேரம் குறைப்பு’ என்ற முதல் கோப்பில் கையொப்பமிடுவார் என்று தகவல்கள் பரவின. ஆனால், அது போன்ற நிகழ்வுகள் ஏதும் நடக்கவில்லை.
அதன் பின் தொடர்ந்து டாஸ்மாக் கடை நேரம் குறைப்பு, பார் நேரம் குறைப்பு போன்ற தகவல்கள் ‘வாட்ஸ் ஆப்’பில் பரவி மறைந்தன. இந்நிலையில் நேற்று காலை திடீரென ‘ நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணிவரைதான் இயங்கும் - முதல்வர் அதிரடி நடவடிக்கை’ என்ற தகவல் வாட்ஸ் ஆப் சமூக வலைத்தளத்தில் பரவியது.
ஆனால், இந்த தகவல் உண்மை இல்லை என டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. டாஸ் மாக் ஊழியர்கள் தரப்பிலும் இது போன்ற அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்று தெரிவித்தனர்.