Published : 17 Jun 2015 10:26 AM
Last Updated : 17 Jun 2015 10:26 AM

கிருஷ்ணா நீர் நிறுத்தம்

சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்த கிருஷ்ணா நீர் நேற்றுடன் நிறுத்தப்பட்டது. கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளதால் இனி மேல் அங்கிருந்து தண்ணீரை திறந்து விட முடியாது என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையின் குடிநீர் தேவைக்காக கடந்த ஜூன் 1-ம் தேதி கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நீர், ஜூன் 4-ம் தேதி தமிழக எல்லை யான ஊத்துக்கோட்டையை வந்தடைந்தது. நாளொன்றுக்கு 1000 கன அடி வீதம் நீர் திறந்துவிடப் பட்டது. ஊத்துக்கோட்டையில் ஒரு நாளைக்கு சுமார் 200 கன அடி நீர் வந்துக் கொண்டிருந்தது. தற்போது ஆந்திராவில் நீர் நிறுத்தப்பட்டாலும் மேலும் 3 நாட்களுக்கு ஊத்துக்கோட்டைக்கு நீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கு இதுவரை சுமார் 0.2 டி.எம்.சி நீர் கிடைத்துள்ளது.

கண்டலேறு அணையின் கொள்ளளவு 68.03 டி.எம்.சியாகும். ஆனால், தற்போது அணையில் 6.39 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ளது. கண்டலேறு அணையின் நீர்மட்டம் குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளதால், பம்ப் செய்தால் மட்டுமே அங்கிருந்து தண்ணீரை எடுக்க முடியும். புவி ஈர்ப்பு விசையின் மூலம் கால்வாய் வழியாக நீர் செலுத்தப்படுவதற்கு போதிய அளவு நீர் அணையில் இல்லை. கிருஷ்ணா நீர் நிறுத்தப்பட்டதால், ஊத்துக்கோட்டையில் கிடைக்கும் நீரின் அளவும் வேகமும் குறைந்துள்ளது.

தற்போது 109.14 கன அடி நீர் மட்டுமே வருகிறது. பூண்டி ஏரியின் நீர் மட்டம் 0.16 டி.எம்.சியாக உள்ளது. சென்னையின் நீர் தேக்கங்களில் மொத்தம் 1.51 டி.எம்.சி நீர் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x