Published : 10 Jun 2015 08:21 AM
Last Updated : 10 Jun 2015 08:21 AM

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு: ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

கோயில் பூசாரியை தற் கொலைக்கு தூண்டிய வழக்கில், வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுக்கு ஜாமீன் வழங்க கீழ் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக் கோரி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக இருந்த, பெரியகுளம் - டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த நாகமுத்து 7.12.2012 அன்று தற்கொலை செய்து கொண்டார்.

அவரை தற்கொலைக்கு தூண்டியதாக, தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா உட்பட 7 பேர் மீது தென்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அந்த 7 பேரும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்றனர்.

இந்நிலையில், நாகமுத்து தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அவரது தந்தை சுப்புராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த ஜூன் 4-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், பெரியகுளம் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, நாகமுத்து தற்கொலை வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு சேர்க்கப்பட்டு இருப்பதாலும், அந்தப் பிரிவில் ஜாமீனில் விடக்கூடாது என்பதாலும், ஓ.ராஜா கீழ் நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற வேண்டும்.

அவ்வாறு சரண் அடைந்து ஜாமீன் மனு தாக்கல் செய்யும்போது, அன்றைய தினமே, தனது ஜாமீன் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள நீதித்துறை நடுவருக்கு உத்தரவிடக் கோரி ஓ.ராஜா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ஓ.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆர்.காந்தி வாதிடும்போது, இந்த வழக்கில் மனுதாரர் 2012-ம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார். தற்போது, இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவும் சேர்க்கப் பட்டுள்ளது. இதற்காக, கீழ் நீதி மன்றத்தில் ஓ.ராஜா சரண்டர் மனு மற்றும் ஜாமீன் மனு தாக்கல் செய்யும்போது, அதே நாளில், அவரது ஜாமீன் மனுவை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ள நீதித்துறை நடுவருக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

அரசு வழக்கறிஞர் அன்பரசன் வாதிடும்போது, பூசாரி தற்கொலை வழக்கின் விசாரணை முடிந்து, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

தற்கொலை செய்து கொண்ட பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். அழகுமணி வாதிடும்போது, இந்த வழக்கில் தங்களையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும். ஓ.ராஜாவுக்கு நிவாரணம் வழங்கக்கூடாது. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தர வேண்டும் என்றார். இதையடுத்து, விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x