

இணையத்தில் எழுதுபவர்கள் கருத்தை சிதைக்கக்கூடாது என்று காக்னிசன்ட் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன் கூறியுள்ளார்.
பண்டைய வரலாறு, அன்றாட நிகழ்வுகள், சாதனை மனிதர்கள், தொழில்நுட்பம் என பல்வேறு பிரிவுகளில் ப்ரீ சென்ஸ் மின்இதழ் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. ப்ரைம் பாய்ண்ட் கே.சீனிவாசனை தலைமை ஆசிரியராக கொண்டு வெளியாகும் இந்த மின் இதழின் 100-வது இதழ் வெளியிட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள தக்கர் பாபா சமிதியில் நேற்று நடந்தது.
100-வது இதழின் புத்தக வடிவை காக்னிசன்ட் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன் வெளியிட்டார். மின் இதழ் வடிவை ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, கேரளாவிலிருந்து காணொளி மூலம் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் காக்னிசன்ட் நிறுவன துணைத் தலைவர் லட்சுமி நாராயணன் பேசியதாவது:
ப்ரீ சென்ஸின் 100-வது மின் இதழ் தற்போது வெளியாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இணையத் தில் எழுதி பலர் புகழ் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனினும், ஏற்கெனவே கூறப்பட்ட கருத்துக் களை சிலர் திரும்பவும் எழுதுகிறார் கள். திரும்ப எழுதுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் கூறப்பட்ட கருத்தை சிதைத்து எழுதுவது தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகர் வி.பொன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ப்ரீசென்ஸ் மின் இதழின் ஆசிரியர் சுஷன் கோஸி வரவேற்று பேச, ப்ரைம் பாய்ண்ட் கே.சீனிவாசன் நன்றியுரை ஆற்றினார்.