Published : 16 Jun 2015 10:09 PM
Last Updated : 16 Jun 2015 10:09 PM
தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடைபெறவில்லை என திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் என்ன நடக்கிறது? என்பது யாருக்கும் தெரியவில்லை. அமைச்சர்கள் தலைமைச் செயலகம் வருகிறார்களா? பணிகள் நடைபெறுகிறதா? என்பதைப் பற்றியெல்லாம் யாருக்கும் அக்கறை இல்லை. தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடைபெறுவதாக தெரியவில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அமைச்சர்கள் அனைவரும் ஆர்.கே.நகரில் முகாமிட்டுள்ளனர்.
ஆர்.கே.நகரில் போட்டியிடாமல் முக்கிய கட்சிகள் ஒதுங்கிக் கொண்ட பிறகும் இத்தனை அமைச்சர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். வெறும் காற்றில் வாளை வீசுவதுபோல வெற்று ஆடம்பர பிரச்சாரம் செய்கிறார்கள். தினமும் பத்திரிகைகளைப் பார்த்தால் கொலை, கொள்ளை, திருட்டு, நகை பறிப்பு என செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆர்.கே.நகரில் இரவு பகலாக பிரச்சாரம் செய்கிறார்கள்.
கமிஷன் கேட்பதாக பொதுப்பணித் துறை மீது புகார் தெரிவித்தார்கள். உடனே ஒப்பந்ததாரர்கள் சங்கமே இரண்டாக உடைக்கப்பட்டது. இதையெல்லாம் தமிழக மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
2015-ம் ஆண்டு பிறந்து 6 மாதங்களாகின்றன. இதுவரை சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான டைரி கூட அச்சடித்து தரப்படவில்லை. வெளிவந்த அரசு காலண்டரில்கூட முதல்வர் படம் இடம்பெறவில்லை. முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது, அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை.
மீண்டும் முதல்வராகியுள்ள ஜெயலலிதா மதியம் 1 மணிக்கு தலைமைச் செயலகம் வந்து காணொலி காட்சி மூலம் கட்டிடங்களை திறப்பதாகவும், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியாகவும் செய்திகள் வருகின்றன. ஏற்கெனவே திறக்கப்பட்ட கட்டிடங்கள் கூட இப்போது திறக்கப்படுகின்றன.
போடியில் 6 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட அரசு பொறியியல் கல்லூரியை ஜெயலலிதா மீண்டும் திறந்து வைத்துள்ளார்'' என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT