

ஆவடியில் மழைநீர் வடிகால் வாயில் கழிவுநீரை திறந்துவிட்ட ஆவடி நகராட்சி கழிவுநீர் லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவடி பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீரை நாள்தோறும் இரு லாரி களில் நகராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது. கழிவுநீர் உரிய வகை யில் வெளியேற்றப்படாமல் லாரிகள் மூலம் ஆவடி புதிய ராணுவ சாலை பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் வாயில் திறந்துவிடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த அவலம் அரங்கேறுவதாக பொது மக்கள் புகார் கூறுகின்றனர்.
தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் அப்துல்ரஹீம் வீடு மற்றும் ஆவடி பெருநகராட்சி அலுவலகம் அருகேயே அன்றாடம் இந்த அவலம் நிகழ்வதாகவும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து, பலமுறை ஆவடி பெருநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. இந்நிலையில் புதிய ராணுவ சாலை பகுதியில் கழிவுநீரைக் திறந்துவிட்டிருந்த நகராட்சியின் கழிவுநீர் லாரியை நேற்று 50-க்கும் மேற்பட்ட மக்கள் சிறை பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆவடி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் திறந்துவிடப்படாது என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.