Last Updated : 09 Mar, 2014 10:04 AM

 

Published : 09 Mar 2014 10:04 AM
Last Updated : 09 Mar 2014 10:04 AM

அதிமுக வேட்பாளர் பட்டியலில் மாற்றம்?

அதிமுக வேட்பாளர் பட்டியலில் சிறிய அளவில் மாற்றம் இருக்கலாம் என்ற செய்திகள் வருவதால் முதல்வர் பிரச்சாரம் முடியாத தொகுதிகளின் வேட்பாளர்கள் பலரும் கலக்கத்தில் உள்ளனர்.



இதுகுறித்து, 'தி இந்து' விடம் பேசிய அதிமுக முக்கியப் பொறுப்பாளர்கள் சிலர், "கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கலாம் என்பதால் சில தொகுதிகளில் பலமில்லாத வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால், இப்போது கம்யூனிஸ்ட்கள் கூட்டணியைவிட்டு வெளியேறி விட்டதால் அதிமுக தனித்தே தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், ஏற்கெனவே கம்யூனிஸ்ட்களுக்கு ஒதுக்கப்படலாம் என்று பட்டியலில் இருந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மறுபரிசீலனை செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

உதாரணமாக, கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கி வைத்திருந்த விருதுநகர் தொகுதியில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை அல்லது தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ-வான மாஃபா பாண்டியராஜன் நிறுத்தப்படலாம் என்றிருந்த நிலையில் டி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

மேலும், சில தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகள் குறித்து கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களிடமிருந்து வந்திருக்கும் அதிருப்தித் தகவல்களின் அடிப்படையிலும் சிலர் மாற்றப்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

எந்தத் தொகுதிக்கும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் நிச்சயமில்லை. மார்ச் 20-க்குள் மாற்றம் இருக்கும்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x