Published : 11 Jun 2015 05:38 PM
Last Updated : 11 Jun 2015 05:38 PM

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் தொடர வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

காரைக்காலில் மத்திய மற்றும் புதுச்சேரி அரசுகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம், பேரணி குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமையில் காரைக்காலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற புதுச்சேரி முன்னாள் முதல்வரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், 5-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் இந்த ஆண்டு 6-ம் வகுப்பில் மீண்டும் சமச்சீர் கல்வி பயில வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இது மாணவர் மத்தியில் பெரும் குழப்பத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வீடு அபகரிப்பு மற்றும் நில மோசடி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி எம்பி காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு மாநில அரசிடமிருந்து இடம் பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி கொண்டு வந்த திட்டங்களை கிடப்பில் போடுவதையே அவர் குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x