வருண பகவானுக்கு அதிகாரபூர்வ சிறப்பு பூஜைகளா?- தமிழக அரசுக்கு இளங்கோவன் கேள்வி

வருண பகவானுக்கு அதிகாரபூர்வ சிறப்பு பூஜைகளா?- தமிழக அரசுக்கு இளங்கோவன் கேள்வி
Updated on
1 min read

மழை வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்துமாறு நீர்வளத்துறை தலைமைப் பொறியாளரே சுற்றறிக்கை அனுப்பவது போன்ற பிற்போக்கு நடவடிக்கைகள் அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " அ.தி.மு.க.வினரின் மூடப் பழக்க வழக்கங்கள் எல்லையற்றுப் போய்க் கொண்டிருக்கின்றன. சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவை விடுவிக்க அ.தி.மு.க.வினர் நடத்திய அலங்கோல கூத்துக்கள் அளவற்று போய்க் கொண்டிருப்பதைப் பற்றி நாம் கவலைப்படவில்லை.

ஆனால் தமிழக அரசின் நீர்வளத்துறையினுடைய தலைமைப் பொறியாளார் எஸ். அசோகன் மே 26, 2015 நாளிட்ட சுற்றறிக்கை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த சுற்றறிக்கையின்படி செயற்பொறியாளார்கள் அனைவரும் மழை வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி அதற்கான விவரங்களை ஜூன் 1-ம் தேதி மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தமிழக அரசு என்பது அனைத்து மதங்களுக்கும், வழிபாடுகளுக்கும் பொதுவானதாகவும், தொடார்பில்லாததாகவும் இருக்க வேண்டுமென பலமுறை அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.

அந்த அரசாணைகளை உதாசீனப்படுத்துகிற வகையில் தமிழக அரசின் நீர்வளத்துறையே இந்துமத சடங்குகள்படி இத்தகைய சிறப்பு பூஜைகளை நடத்த வேண்டும் என்று சொல்வது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும். இத்தகைய உரிமை இஸ்லாமிய, கிறிஸ்துவ மதத்தினருக்கும் வழங்குவதற்கு வாய்ப்பிருக்கிறதா? அப்படி வாய்ப்பில்லாத போது குறிப்பிட்ட மதத்தின் நம்பிக்கைகளை மற்றவர்கள் மீது புகுத்தலாமா?

தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மனநிலைப்படி அ.தி.மு.க.வினர் செயல்படுவதைப் பற்றி நாம் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் தமிழக அரசின் துறையைச் சார்ந்த தலைமைப் பொறியாளரே ஒரு குறிப்பிட்ட மதச்சார்பு நிலையை எடுப்பதை எப்படி அனுமதிக்க முடியும்?

எனவே, இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டுமெனில் முதற்கட்டமாக சுற்றறிக்கை அனுப்பிய குறிப்பிட்ட அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்தால் தான் இத்தகைய மூடப் பழக்க வழக்கங்களை தடுத்து நிறுத்த முடியும்.

வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதால் மழை பெய்யும் என்று தமிழக அரசுக்கு நம்பிக்கை ஏற்படுமெனில் அறிவியிலின் அடிப்படையில் செயல்படுகிற இந்திய வானிலை ஆய்வுத்துறையின் அறிக்கைகளை எப்படி மக்கள் நம்பி ஏற்றுக் கொள்வார்கள்?

அறிவியலில் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிற நவீன யுகத்தில் இத்தகைய பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in