Published : 06 Jun 2015 08:32 AM
Last Updated : 06 Jun 2015 08:32 AM

பாரம்பரிய நகரமான காஞ்சிபுரத்தில் கட்டிடக் கலைக் குழு ஆய்வு: மத்திய அரசிடம் வரும் 18-ம் தேதி அறிக்கை தாக்கல்

மத்திய அரசால் பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்ட காஞ்சி புரம் நகரில் ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து மத்திய அரசின் கட்டிடக் கலை ஆலோசனை குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

இந்திய நகரங்களான அஜ்மீர், லால் அமிஸ்டர், அமராவதி, படாமி, துவராக, கயா, வாரங்கால், பூரி, காஞ்சிபுரம் மதுரா, வாரணாசி, வேளாங்கண்ணி ஆகியவற்றை பாரம்பரிய நகரங்களாக கடந்த 2014-ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு, அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக அந்த நகரங்களின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டது.

மேலும் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில், ஏற்கெனவே உள்ள அடிப்படை தேவைகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு செய்து முழுமையாக மேம்படுத்தப்பட்ட நகரமாக உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இதுகுறித்து மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் அந்தந்த நகரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் கருத்து கேட்டு, அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். மேலும் இந்த வளர்ச்சி பணிகள் நன்கொடை மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நிதியின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, காஞ்சி நகரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விதமான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள, மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், தேசிய பாரம்பரிய மேம்பாடு மற்றும் அபிவிருத்தி யோஜனா திட்டத்தின் கீழ், கடந்த ஜனவரி மாதம் முதற்கட்டமாக ரூ.25 கோடி மதிப்பில் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாகம் நகரப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் தொடர்பாக, தமிழக அரசு மூலம் திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்தது.

இந்த அறிக்கையில் உள்ள பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்வதற்காக, மும்பை யைச் சேர்ந்த மத்திய அரசின் கட்டிடக்கலை ஆலோசனை குழுமத்தை சேர்ந்த அபாநரைய்ன் தலைமையிலான சனாயாவன் ரேவால் மற்றும் பிரியங்கா ஆகியோர் அடங்கிய குழு நேற்று காஞ்சிபுரம் வந்தது.

அங்குள்ள கயிலாசநாதர், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள் கோயில்கள் மற்றும் கோயில்களுக்கு செல்லும் பாதை கள், அப்பகுதிகளில் ஏற்படுத்த வேண்டிய கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்தனர். இது தொடர்பாக, அபாநரைய்ன் கூறியதாவது: முதற்கட்டமாக கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில் என்ன பணிகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது போன்றவை தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். பின்னர், கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்வதற்கான பணிகள் தொடங்கப்படும். தற்போது நகராட்சி நிர்வாகப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். இந்த ஆய்வறிக்கை வரும் 18-ம் தேதி மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x