Published : 08 Jun 2015 08:06 AM
Last Updated : 08 Jun 2015 08:06 AM

காற்றழுத்த தாழ்வுநிலையால் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தமிழகத்தின் மேற்கு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பையிலிருந்து 690 கி.மீ. தென்மேற்கு திசையில் இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதன் காரணமாக காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது உருவாகியுள்ளது. இது மேலும் வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகரும்.

இதனால் தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யாது என்றாலும், மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யலாம். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.

தமிழகத்தில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் புழல், பொன்னேரி, ஆவடி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை யும் செங்குன்றத்தில் ஒரு செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது. கடந்த 2 நாட்களாக குறைந்திருந்த வெயில் நேற்று மீண்டும் அதிகரித்து காணப்பட்டது. கடலூரில் 39.2 டிகிரி, சென்னையில் 37.1 வெயில் நேற்று பதிவாகியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x