சிதிலமடைந்து கிடக்கும் ‘தமிழ் வாழ்க’ ஒளிரும் பலகைகள்: நெல்லை மாநகராட்சி கவனிக்குமா?

சிதிலமடைந்து கிடக்கும் ‘தமிழ் வாழ்க’ ஒளிரும் பலகைகள்: நெல்லை மாநகராட்சி கவனிக்குமா?
Updated on
1 min read

திருநெல்வேலியில் மாநகராட்சி சுவர்களில் திருக்குறள்களையும், அவற்றுக்கான விளக்கங்களையும் எழுத மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் முன்வந்துள்ளதை வரவேற்கலாம். அதேநேரத்தில் `தமிழ் வாழ்க’ என்ற ஒளிரும் பலகைகள் சிதிலமடைந்து கிடப்பதை யார் கவனிப்பது என்று தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அரசு சுவர்களில் விளம்பரங்களை எழுத கூடாது, சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது என்ற உத்தரவு இருந்தாலும். அதையும் மீறி சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் எழுதப்படுகின்றன. இந்நிலையில் திருநெல்வேலியில் மாநகராட்சி சுவர்களில் திருக்குறளை தெளிவுரையுடன் எழுத திருநெல்வேலி மாநகர பொதுநலக்குழுவுக்கு மாநகாரட்சி அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி திருக்குறளையும், அதற்கான விளக்கத்தையும் எழுத குறிப்பிட்ட சுவர்களை தெரிவிக்குமாறு மாநகராட்சிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் நேற்றுமுன்தினம் கூறினார். `இளம் தலைமுறையினர் அறியும் வகையில் திருக்குறளை எழுதுவது திருக்குறளுக்கும், தமிழுக்கும் செய்யக்கூடிய ஒப்பற்ற செயலாகும்’ என்று ஆட்சியர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேவேளை, மாநகராட்சி அலுவலகத்திலும், மண்டல அலுவலகங்களிலும், அரசுத்துறை அலுவலகங்களிலும் கடந்த திமுக ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட `தமிழ் வாழ்க’ ஒளிரும் பலகைகள், தற்போது கவனிப்பாரின்றி கைவிடப்பட்டுள்ளன. பல இடங்களில் அவை விழுந்து நொறுங்கி சிதிலமடைந்திருக்கின்றன.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தின் முன்பகுதியிலுள்ள பூங்காவில் அவ்வாறு `தமிழ்வாழ்க’ பலகை சிதிலமடைந்திருக்கிறது. திருக்குறள்களை தெளிவுரையுடன் எழுத முன்வரும் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள், உடைந்து கிடக்கும் `தமிழ் வாழ்க’ ஒளிரும் பலகைகளை பராமரிப்பது அவசியம் என்பதுதான் தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in