Published : 21 Jun 2015 05:39 PM
Last Updated : 21 Jun 2015 05:39 PM

என் உடல்நிலை சீராக இருக்க யோகாவே காரணம்: விஜயகாந்த்

தனது உடல்நிலை சீராக இருப்பதற்கு யோகாசனமே காரணம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த தலைமை வகித்தார்.

விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, இளைஞரணித் தலைவர் சுதீஷ், தேமுதிக கொறடா சந்திரகுமார் உட்பட தேமுதிக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இதில் பங்கேற்று யோகாசனங்களை செய்தனர்.

விஜயகாந்த் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் வெள்ளை உடை அணிந்திருந்தனர். காலை 6.40 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி சுமார் 40 நிமிடங்கள் நடந்தது. பத்மாசனம், பிராணாயாமா உள்ளிட்ட ஆரம்ப நிலை யோகாசனங்களை விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் செய்தனர்.

பின்னர் நிருபர்களிடம் விஜயகாந்த் கூறும்போது, "யோகா என்பது சாதி, மதம், மொழி என அனைத்துக்கும் அப்பாற்பட்டது. இந்தியாவின் பாரம்பரியமான யோகக்கலைக்கு ஐ.நா. அங்கீகாரம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.

நான் தினமும் யோகா செய்து வருகிறேன். இதனால்தான் எனது உடல்நலம் சீராக இருக்கிறது. எனது கட்சிக்காரர்கள் சுபிக்‌ஷமாக இருக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இனி ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்படும்" என்றார் விஜயகாந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x