Last Updated : 11 Mar, 2014 12:00 AM

 

Published : 11 Mar 2014 12:00 AM
Last Updated : 11 Mar 2014 12:00 AM

முடிவெடுக்க மேலிடம் தாமதிப்பதால் காங். தேர்தல் பணிகள் பாதிப்பு: மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேட்டி

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸின் தேர்தல் பணிகள் பாதிக்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறும்போது, “மக்களவைத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் சேரவுள்ள கூட்டணி குறித்து கட்சியின் தலைமை முடிவு எடுக்காமல் உள்ளது. இதனால், தமிழக காங்கிரஸாரின் தேர்தல் பணிகள், வியூகங்கள் எல்லாம் தாமதப்பட்டு கொண்டிருப்பதாக கருதுகிறோம்.

எனவே, அகில இந்திய காங்கிரஸ் தலைமை, தமிழக காங்கிரஸ் கட்சி யினுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பு.

தமிழகத்தில் கூட்டணி அமைப் பது குறித்து காங்கிரஸின் பொறுப்பாளர்கள் மற்றும் உயர் நிலைக் குழுவைச் சேர்ந்தவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரமான வாக்கு வங்கி உள்ளது. குறிப்பாக கிராமங்களில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ளனர். இதை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது” என்றார் வாசன்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இணைவது குறித்து வாசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “காங்கிரஸ் ஒரு மாநில கட்சி அல்ல; தேசிய கட்சி. கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக, பிரதமர் மன்மோகன் சிங்கை திங்கள்கிழமை காலை ஜி.கே.வாசன் சந்தித்தார். அப்போது, தமிழக மீனவர்களை தாக்கி, கைது செய்யும் இலங்கை ராணுவத்தின் செயல் குறித்தும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வாசன் பேசினார்.

விரைவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் பிரத மரிடம் வாசன் வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x