Published : 06 Jun 2015 02:43 PM
Last Updated : 06 Jun 2015 02:43 PM

பாலித்தீன் தீமையை உணர்த்த தருமபுரியில் ரூ.12 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு துணிப்பை விநியோகம்

தருமபுரி மாவட்டத்தில் பாலித்தீன் பைகள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் துணிப்பைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மாநில சுற்றுச்சூழல் துறை கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து மாவட்ட கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகளில் தேசிய பசுமைப் படை செயல்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்ட கல்வித் துறையின் தேசிய பசுமைப்படை சார்பில் பாலித்தீன் பயன்பாட்டை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாலித்தீன் பைகள் பயன்பாட்டை குறைக்கவும், அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கை பொதுமக்களுக்கு உணர்த்தவும் பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் துணிப்பைகள் விநியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது.

தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், நல்லம்பள்ளி ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ள 150 அரசுப் பள்ளிகளில் தேசிய பசுமைப் படை செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் தலா 50 பேர் வீதம் தேசிய பசுமைப் படை தன்னார்வல மாணவர்களுக்கு ரூ.64 விலை மதிப்புள்ள துணிப்பை வழங்கப்பட்டுள்ளது.

அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் தேசிய பசுமைப் படை செயல்படும் 100 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விரைவில் இந்தப் பைகள் வழங்கப்பட உள்ளது.

இதுதவிர, பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தை, பேருந்து நிலையங்கள், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் விநியோகம் செய்ய மற்றொரு வகையான துணிப்பைகள் வந்து சேர்ந்துள்ளன. ரூ.20 விலை மதிப்பு கொண்ட 20 ஆயிரம் பைகள் சுற்றுச்சூழல் துறை மூலம் பெறப்பட்டுள்ளது. பைகள் விநியோகத்தை விரைவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைக்க உள்ளார்.

இதுபற்றி தேசிய பசுமைப் படை அமைப்பின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் கூறும்போது, ‘வெறும் பிரச்சாரமாக மட்டும் பாலித்தீன் ஒழிப்பை வலியுறுத்துவதை விட அதற்கான மாற்றுவழிக்கான பொருளை கொடுத்து பிரச்சாரம் செய்தால் அதிக பலன் இருக்கும் என மாவட்ட கல்வி நிர்வாகம் மூலம் முடிவு செய்தோம். பின்னர் தேசிய பசுமைப்படையின் தலைமையிடம் கோரிக்கை வைத்து மாணவ, மாணவியருக்கும், பொதுமக்களுக்கும் இந்த துணிப்பைகளை இலவசமாக விநியோகம் செய்து வருகிறோம். சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்த முயற்சி சிறந்த பலனை அளிக்கும் என நம்புகிறோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x