Published : 23 May 2014 09:59 AM
Last Updated : 23 May 2014 09:59 AM

மாணவர்களை கால்நடைகள் போல நடத்தும் பள்ளிகள்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

தனியார் பள்ளிகளில் மாணவர்களை கால்நடைகளைப் போல நடத்துவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.பள்ளி விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காரைக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 15 ஆயிரம் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் உள்ளன. 62 கல்வி மாவட்டங்களில் 4,575 உயர்நிலைப் பள்ளிகளும், 5,030 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. 10 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி விதி 76-ல் தினமும் 5 மணி 40 நிமிடத்துக்கு குறையாமல் பள்ளி நடைபெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விதி 77-ல் கல்வி ஆண்டில் 200 நாட்கள் பள்ளி நடைபெற வேண்டும். அதில் 180 நாள்கள் வகுப்புகளும், 20 நாட்கள் தேர்வும் நடைபெற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைக்கு மாறாக அரசு, அரசு உதவி பெறும், தனியார், மெட்ரிக் மற்றும் ஆங்கிலப் பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் வகுப்புகளை நடத்துகின்றன. இப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு பாடத்தை 9-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்பு பாடத்தை 11-ம் வகுப்பிலும் கற்பிக்கின்றனர்.

தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்துக்காக மாணவர்களை இயந்திரம்போல மாற்றுகின்றனர். மாணவர்களின் சுமையைக் குறைக்கவே, சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், தனியார் பள்ளிகளில் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு விடுமுறை வழங்காமல், மாணவர்களிடம் பாடச் சுமையை ஏற்றுகின்றனர். இதனால், மாணவர்களால் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட முடியவில்லை. மன அழுத்தம் காரணமாக பல மாணவர்கள் தற்கொலைக்குத் தூண்டப்படுகின்றனர்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி விதிகள் 76, 77-ஐ கடுமையாகப் பின்பற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, ’தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கால்நடை களைப்போல நடத்தப்படுகின்றனர். இதனால் சில மாணவர்கள் தற்கொலைக்கு தூண்டப்படு கின்றனர். கல்வி என்கிற பெயரில் மாணவர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தும் செயலை அனுமதிக்க முடியாது. கல்விச் சட்டங்களை தனியார் பள்ளி நிர்வாகங்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

விடுமுறையில் எதற்கு பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x