சென்னையில் காணாமல்போன இரண்டரை வயது குழந்தையை மீட்ட தொழிலாளி

சென்னையில் காணாமல்போன இரண்டரை வயது குழந்தையை மீட்ட தொழிலாளி
Updated on
1 min read

சென்னையில் காணாமல் போன குழந்தையை மீட்ட தொழிலாளி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

உளுந்தூர்பேட்டை அருகே அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், சுந்தராம்பாள் தம்பதியினர். இவர்கள் சென்னை அனகாபுத்தூர் பகுதியில் தங்கி கட்டுமான வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2ம் தேதி சுப்ரமணியன் தனது உறவினர் இறந்ததாக வந்த தகவலையடுத்து அவர் தனது மனைவி சுந்தராம்பாளை அழைத்துக்கொண்டு அங்கனூர் வருவதற்காக அனகாபுத்தூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்துள்ளார்.

அங்கு இரண்டரை வயதே ஆன ஆண் குழந்தை ஒன்று அழதுகொண்டிருந்தது. அந்தப்பகுதியில் யாரும் இல்லாததால் அந்த குழந்தையை விட்டுவிட்டு செல்ல மனமில்லாத தம்பதி சுமார் 2 மணிநேரம் அங்கேயே அந்த குழந்தையை வைத்துகொண்டிருந்தும் யாரும் வரவில்லை.

அதன்பின் அவர்கள் அந்த குழந்தையை அழைத்துக்கொண்டு அங்கனூர் வந்து துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அந்த குழந்தையை அழைத்து வந்து ஒப்படைத்தனர்.

இதுகுறித்து மகளிர் காவல் நிலைய போலீஸார் உடனடியாக விழுப்புரம் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிற்கு தவவல் தெரிவித்தனர். மேலும் சென்னை அனகாபுத்தூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதில் சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் இரண்டரை வயது குழந்தை டெல்லிபாபு கடந்த 2ம் தேதி மதியம் முதல் காணவில்லை எனவும், இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து குழந்தையை தேடிவந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக அனகாபுத்தூர் போலீஸார், நாகராஜ் மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தையின் பெற்றோர்கள் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பார்த்தபோது அந்த குழந்தை நாகராஜ் குழந்தை என்பது தெரியவந்தது.. மேலும் குழந்தையை பாதுகாப்பாக கொண்டு வந்து ஒப்படைத்த சுப்ரமணியன் தம்பதியினருக்கு நன்றியை தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் பெற்றோரிடம் டெல்லிபாபுவை ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in