Published : 09 May 2015 07:57 AM
Last Updated : 09 May 2015 07:57 AM

அவதூறு வழக்குகள் தேவை; சிறை தண்டனை கூடாது: சுப்பிரமணியன் சுவாமி கருத்து

அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகிறது என்பதற்காக அவதூறு வழக்கே கூடாது என்று கூறிவிட முடியாது. அவதூறு வழக்கு அவசியமானதுதான் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறினார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் தங்கள் மீதான அவதூறு வழக்குகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவை அனைத்தும் இணைத்துக் கொள்ளப்பட்டு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

‘‘இந்த வழக்கில் மனுதாரர்கள் மீதான அவதூறு வழக்குகள் சரியா, தவறா என்று ஆராயப்போவதில்லை. ஆனால், அவதூறு வழக்கு அடிப்படை சுதந்திரத்தை பறிக்கிறதா என்பதை பார்க்கப் போகிறோம்’’ என்று நீதிபதிகள் கூறினர். ராகுல் மீதான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த சூழலில், பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு அவதூறு வழக்குகள் காரணமாகின்றன. அவதூறு வழக்கு தொடர்பான சட்டப்பிரிவுகள் 499, 500 ஆகியவை நீக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘அடிப்படை உரிமைகளைக் காரணம் காட்டி அவதூறு வழக்குகளே கூடாது என்று சொல்லிவிட முடியாது. அவதூறு வழக்கு அவசியமானதுதான். கிரிமினல் அவதூறு வழக்குகள்தான் தவிர்க்கப்பட வேண்டும். அவதூறு வழக்கு மூலம் ஒருவரை சிறையில் அடைக்கக் கூடாது. நஷ்டஈடு போன்ற தண்டனைகளை மட்டும் வழங்கலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x