Last Updated : 12 May, 2015 09:02 AM

 

Published : 12 May 2015 09:02 AM
Last Updated : 12 May 2015 09:02 AM

தமிழக அரசியல் வரலாற்றில் மீண்டும் திரும்பும் 2002

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2002-ம் ஆண்டைப் போன்ற அரசியல் நிகழ்வு மீண்டும் தமிழகத்தில் நடப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி நில பேரம் தொடர்பான இரண்டு வழக்குகளில் கடந்த 9.10.2000 அன்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப் பட்டது.

அதனைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, புவனகிரி, கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கும் மேல் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த காரணத்தால், தேர்தலில் போட்டியிட தகுதி யில்லை என்று கூறி அவரது 4 வேட்பு மனுக்களும் தேர்தல் அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனால் அந்தத் தேர்தலில் அவரால் போட்டியிட முடியாமல் போனது. எனினும், அவரது தலைமையிலான அ.தி.மு.க. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

தேர்தலில் போட்டியிடாத ஜெயலலிதா, அதிமுக சட்டபேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநர் பாத்திமா பீவியும் அவருக்கு அனுமதி வழங்கினார். இதனால் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை 2001-ம் ஆண்டு மே 14-ம் தேதி பதவியேற்றது.

ஜெயலலிதா இவ்வாறு பதவியேற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பலர் மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா முதலமைச்ச ராக பதவியேற்றது செல்லாது என 21.9.2001 அன்று தீர்ப்பளித்தது.

ஓ.பி.எஸ். முதல்வரானார்

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை அன்றைய தினமே பதவி விலகியது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந் தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார்.

மீண்டும் முதல்வரான ஜெ

அதன் பிறகு டான்சி வழக்குகளில் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் 4.12.2001 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. டான்சி வழக்குகளில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இந்தத் தீர்ப்பின் காரணமாக தேர்தலில் போட்டியிடவும், முதல்வராக பதவி யேற்கவும் ஜெயலலிதாவுக்கு இருந்த சட்ட ரீதியிலான தடை நீங்கியது. ஆகவே, 21.2.2002 அன்று நடைபெற்ற ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா, சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக ஜெயலலிதா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியது. 2.3.2002 அன்று ஜெய லலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

2001-ம் 2014-ம்

2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் காரணமாக 2001-ம் ஆண்டில் நடந்ததைப் போலவே முதல்வர் பதவியை ஜெயலலிதா இழக்க நேர்ந்தது. 2001 போலவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றுக் கொண்டது.

மீண்டும் திரும்பும் 2002

இந்நிலையில் சொத்து குவிப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடவோ, முதலமைச்சராக பதவி வகிக்கவோ தற்போது ஜெயலலிதாவுக்கு எந்த தடையும் இல்லை.

ஆகவே 2002-ம் ஆண்டைப் போலவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவி விலகும் என்றும், ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை ஓரிரு நாளில் பதவி ஏற்கும் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x