Published : 26 May 2014 08:55 AM
Last Updated : 26 May 2014 08:55 AM

கேரளாவில் இருந்து ரூ.1000 கோடிக்கு மின்சாரம்: மின் வாரியத்தின் நிதிச்சுமை அதிகரிப்பு

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் முன்பாகவே பிரச்சாரங்கள் தொடங்கிவிட்டன. அதோடு பள்ளித் தேர்வும் நடைபெற்றதால் கடந்த இரண்டு மாதங்களில் தமிழகத்தின் மின் தேவை அதிகரித்தது. இக்காலகட்டத்தில் தமிழ்நாட்டின் மின் உற்பத்தியும் பாதிக்கப் பட்டிருந்ததால் வெளியிலிருந்து மின்சாரத்தை வாங்கி நிலைமையை சமாளிக்க, தமிழக மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது.

வெளி மாநிலங்களில் குறிப்பாக வடமாநிலங்களில்தான் மின்சாரம் தேவைக்கு அதிகமாக இருப்பு உள்ளது. ஆனால் அங்கிருந்து தென் மாநிலங்களுக்கு மின்சாரம் கொண்டு வர, மின் கட்டமைப்பில் அதிக நெருக்கடி ஏற்பட்டதால், மின் தொகுப்பில் அனுமதி கிடைக்கவில்லை. எனவே, தென் மாநிலங்களிலுள்ள தனியார் மற்றும் மத்திய அரசின் என்.டி.பி.சி., (தேசிய அனல் மின் கழகம்) நிலையத்திலிருந்து மின்சாரம் வாங்க, தமிழக மின் வாரியம் முயற்சி மேற்கொண்டது.

இதன்படி கேரளாவில் காயம்குளத்திலுள்ள தேசிய அனல்மின் கழகத்தின் நாப்தா மின் நிலையத்திலிருந்து, தினமும் 350 மெகாவாட் மின்சாரம் வாங்கப் பட்டது. கடந்த இரண்டரை மாதங் களில் அங்கிருந்து வாங்கப்பட்டுள்ள மின்சாரத்துக்காக ரூ.1,000 கோடி கூடுதல் செலவாகியுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மின் வாரியத்தின் நிதிச்சுமை அதிகரித்துள்ளது.

ஏற்ெகனவே, கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை, நான்கு தனியார் மின் நிலையங்களான பி.பி.என்., மதுரா மின் நிறுவனம், சாமல்பட்டி மின் நிறுவனம் மற்றும் ஜி.எம்.ஆர்., மின் நிறுவனம் ஆகியவற்றிலிருந்து மின்சார வாரியம் மின்சாரத்தை வாங்கியுள்ளது. இதற்காக 8,000 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் காற்றாலை மின்சார உற்பத்தி, 500 மெகாவாட்டிலிருந்து, 1,500 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x