Published : 15 May 2015 09:21 PM
Last Updated : 15 May 2015 09:21 PM
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தபோது பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைப்பதாக பாஜக அரசு நாடகம் ஆடியது. ஆனால், விலையை உயர்த்தியதுதான் பாஜகவின் சாதனை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக மே மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றி அமைத்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன.
கடந்த 15 நாட்களுக்குள்ளாக பெட்ரோல் விலையை 7 ரூபாய் 10 காசும், டீசல் விலையை 5 ரூபாய் 10 காசும் உயர்த்தி இருப்பது வன்மையான கண்டத்துக்கு உரியதாகும்.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தபோது பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைப்பதாக பாஜக அரசு நாடகம் ஆடியது. ஆனால், கடந்த ஓராண்டில் பெட்ரோல் விலையை 15 ரூபாய் 05 காசும், டீசல் விலையை 11 ரூபாய் 15 காசும் உயர்த்தி இருப்பதுதான் பாஜக அரசின் சாதனை ஆகும்.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியையும் உயர்த்தி மக்கள் மீது அதிக சுமையை ஏற்றி உள்ளது. இதனால் விலைவாசி மேலும் அதிகரிப்பதுடன், சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களும் பாதிப்புக்கு உள்ளாவர்கள்.
எனவே, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT