

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை நுழைத்துவிடக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் தற்போதுள்ள முறையை மாற்ற தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிற்படுத்தப்பட்டோர் பிரிவை, பன்றி வளர்ப்போர், பாம்பாட்டிகள் போன்ற மிகவும் பின்தங்கியுள்ள ஜாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சற்று முன்னேறிய பிற்படுத்தப்பட்டோர் என மூன்றாகப் பிரித்து இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எக்காரணத்தை முன்னிட்டும் இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை நுழைத்துவிடக் கூடாது. இந்த விஷயத்தில் சமூக நீதிப் போராளிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் அவர்களுக்கு முழுபலன் கிடைக்கவில்லை. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மூன்றாகப் பிரிப்பது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய 27 சதவீதத்தையும் தட்டிப் பறிக்கும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது என கி.வீரமணி கூறியுள்ளார்.