Published : 07 May 2015 07:56 AM
Last Updated : 07 May 2015 07:56 AM

மாணவர்களுக்கு கடும்தண்டனை தரக்கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தவறு செய்யும் மாணவர்களுக்கு வழங்கும் தண்டனை, அவர்கள் செய்த தவறுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். கடுமையானதாக இருக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் விவேகானந்தா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.ஏ. பொருளியல் படிக்கும் மாணவர் மீது, விடுதிக்கு மது போதையில் வந்ததாக கூறி கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. சம்பந்தப்பட்ட மாணவர் ஒரு ஆண்டு தேர்வு எழுதவும், வகுப்புகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மாணவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். தனி நீதிபதி தனது உத்தரவில், மாணவர்கள் நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் நாட்டை வழிநடத்தக் கூடியவர்கள். அவர்களது ஒழுக்கம் சிறப்பாக இருக்க வேண்டும். ஒழுங்கீனத்துக்காக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறியிருந்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்து கல்லூரியில் சேர்க்க உத்தரவிடக் கோரி மாணவர், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.மணிக் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இதில் தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மாணவரை தேர்வு எழுத அனுமதிப்பதாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் மிகவும் முக்கியம். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள விளைவுகளை மாணவர்களால் சமாளிக்க முடியவில்லை.

குருகுல கல்வியில் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்கிறோம். அதே நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையானது அவர்கள் புரிந்த குற்றத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். கடுமையான தண்டனை வழங்கக் கூடாது என உத்தரவில் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x