Published : 31 May 2014 10:41 AM
Last Updated : 31 May 2014 10:41 AM

ஆன்-லைனில் கட்டிட வரைபட அனுமதி: ஆவணங்கள் முறையாக இருந்தால் 12 நாளில் அனுமதி கிடைக்கும்

கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கான அனைத்து நடைமுறைகளையும் இனி ஆன்-லைனிலேயே செய்து கொள்ளும் வசதிகளை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இதன்படி விண்ணப்பித்தல், ஆவணங்களை சமர்ப்பித்தல், திருத்தங்கள் செய்தல், பதிவுக் கட்டணம் செலுத்துதல் ஆகிய வற்றை ஆன்-லைன் மூலமாகவே செய்யலாம். விண்ணப்பம் சமர்ப்பித்தவுடன் திட்ட அனுமதி விண்ணப்பத்தின் எண் மனுதாரருக்கு வழங்கப்படும். அதன் பின், வரைபடம் அந்தப் பகுதியிலுள்ள உரிமம் பெற்ற அளவாளருக்கு கணினி மூல மாகவே கூர்ந்தாய்வுக்கு அனுப்பப்படும்.

வரைபடம் விதிகளுக்கு உட்பட்டதா என்று அளவாளர்களே கணினி மூலமாக சரிபார்க்கலாம். அதில் ஏதேனும் தவறு இருந் தால் உடனே மனுதாரருக்கு குறுஞ்செய்தி மற்றும் மின் அஞ்சல் அனுப்பப்படும். அவற்றை சரிசெய்து மீண்டும் பழைய எண்ணிலேயே சமர்ப்பிக்கலாம். அதன்பிறகு, அது வட்டார நகரமைப்பு செயற்பொறி யாளருக்கு ஆன்லைன் மூலம் அனுப்பப்படும். அவர் உதவி பொறியாளர் அல்லது உதவி செயற்பொறியாளருக்கு கள ஆய்வு செய்வதற்கு அனுப்புவார்.

வரைபடம் மற்றும் ஆவணங் கள் முறையாக இருப்பின் 7 நாட்களுக்குள் செயற் பொறியாளருக்கும், 3 நாட்களுக்குள் மேற்பார்வை பொறியாளருக்கும், 2 நாட்களுக்குள் வட்டார இணை/துணை ஆணையாளருக்கு ஆன்-லைனில் சமர்ப்பிக்கப்படும்.

திட்ட அனுமதி ஒப்புதல் வழங்கப்பட்ட பின் இவ்விவரம் உடனடியாக மனுதாரருக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும்.

கட்டணம் செலுத்தும் முறை

மனுதாரர் ஒப்புதல் வழங்க வேண்டி செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை ஆன்-லைனிலோ அல்லது மாநகராட்சி இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட செலுத்து சீட்டோடு (சலான்) நேரடியாக வங்கி யிலோ செலுத்தலாம்.எத்தனை விண்ணப்பங்கள் சரிபார்க்கப் பட்டதோ அதற்கேற்றவாறு அளவாளருக்கு மாநகராட்சியே கட்டணத்தை வழங்கும்.

குறுஞ்செய்தி மூலம் மனுதாரருக்கு தகவல்

கட்டணத்தை செலுத்திய உடனே ஆன்-லைன் முறையிலேயே மனுதாரருக்கு திட்ட அனுமதி உருவாக்கப்பட்டு குறுஞ்செய்தி மற்றும் மின் அஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். மனுதாரர் இதனை சென்னை மாநகராட்சி இணைய தளத்திலிருந்து பிறப்பு, இறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்வது போல் செய்து கொள்ளலாம்.

வரிசை மீறி ஒப்புதல் வழங்க இயலாது

ஒவ்வொரு நிலையிலும் விண்ணப்பத்தின் மூப்பு அடிப் படையிலேயே விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்யப்படும். உரிமம் பெற்ற அளவாளர் முதல் வட்டார இணை/துணை ஆணையர் வரையில் வரிசையை மீறி ஒப்புதல் வழங்க இயலாது.

செயல்படாத அளவாளருக்கு உரிமம் ரத்து

சரியாக செயல்படாத அல்லது முறை தவறிய சான்றிதழ் உரிமம் பெற்ற அளவாளர்களின் பெயர்கள் தவறிழைத்தோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x