Published : 11 May 2015 10:26 AM
Last Updated : 11 May 2015 10:26 AM

இந்தியாவின் முதல் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு: 13 மாநிலங்களின் இறுதி பட்டியல் இணையத்தில் வெளியீடு

சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பின் இறுதி பட்டியல் இந்தியாவில் 13 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் இணையத்தில் வெளியாகியுள்ளது. வரைவுப் பட்டியல் 16 மாநிலங்களிலும், நான்கு யூனியன் பிரதேசங்களிலும் வெளியாகியுள்ளது.

சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டிலேயே முதன் முறையாக நடத்தப்படுகிறது. 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கணக்கெடுப்பு மாநில வாரியாக முடிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் இந்தியா முழுவதும் சுமார் 27 லட்சம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வீடு வீடாக சென்று சமூக பொருளாதார தகவல்களை சேகரித்தனர்.

இதில் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்கள் மட்டுமல்லாமல், ஒருவரின் சமூக பொருளாதார நிலையை கண்டறியும் வகையில் வீட்டில் குளிர்சாதன பெட்டி, கணினி, வாகனம் உள்ளதா, வாடகை வீடா சொந்த வீடா, வீட்டின் கூரை, சுவர் எதனால் கட்டப்பட்டுள்ளது, மின் இணைப்பு வசதி, குடிநீர் வசதி, மனித கழிவுகளை அகற்றும் தொழில் செய்பவர்கள் உள்ளனரா, மாற்றுத் திறனாளிகள் உள்ளனரா போன்ற தகவல்கள் இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது அஸ்ஸாம், பீகார், கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கும் சண்டிகர் மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களுக்குமான இறுதி பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதே போல் தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட 16 மாநிலங்களுக்கும் அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி உள்ளிட்ட நான்கு யூனியன் பிரதேசங்களுக்குமான வரைவுப் பட்டியல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் 15 மாவட்டங்களுக்கு மட்டுமே வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்திலும் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை. வரைவுப் பட்டியல் வெளியான தேதியிலிருந்து 21வது நாள் முதல் 30வது நாள் வரை பட்டியலில் திருத்தங்கள் இருந்தால் உரிய அலுவலகங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x