Last Updated : 30 May, 2015 04:08 PM

 

Published : 30 May 2015 04:08 PM
Last Updated : 30 May 2015 04:08 PM

சாலை விபத்து மரணங்கள் அதிகம் ஏற்படும் நகரம் சென்னை: ஆர்.டி.ஐ. தகவல்

தகவலுரிமையின் படி பெறபட்ட தகவல்கள் கூறுவது யாதெனின் தலைநகர் டெல்லியை விடவும் சென்னை நகரம் சாலை விபத்துகளில் முதன்மை வகிக்கிறது என்பதே.

கடந்த ஆண்டு 67,232 சாலை விபத்துகளுடன் முதலிடத்திலும் இதில் 15,176 விபத்து மரணங்களில் 2-ம் இடத்திலும் உள்ளது தமிழ்நாடு. இதற்கு முந்தைய ஆண்டும் இப்படியே. 66,220 சாலை விபத்துகளில் 15,545 மரணங்களுடன் தமிழ்நாடு முதலிடம் வகித்தது.

டெல்லியைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான ‘சேவ் லைஃப் அறக்கட்டளை’ செய்திருந்த தகவலுரிமை மனுவின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினசரி அளவில் சென்னை நகரமெங்கிலும் சிலபல விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக மருத்துவர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மட்டும் நாளொன்றுக்கு சராசரியாக சாலை விபத்துகள் காரணமாக 60 பேர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இது குறித்து நரம்பியல் அறுவைசிகிச்சை துறை தலைமை மருத்துவரான ரங்கநாதன் ஜோதி தெரிவிக்கும் போது, 60 சாலை விபத்து கேஸ்களில் குறைந்தது 20 பேருக்கு தலைக்காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது, குறைந்தது 6 பேர்களுக்காவது அவசர அறுவை சிக்ச்சை நடத்தப்படுகிறது.

நெடுஞ்சாலைகளில் அதிவேகமாகச் செல்வதே இதற்குக் காரணம், அதிவேகத்தினால் ஏற்படும் விபத்துகளிலிருந்து ஹெல்மெட்கள் கூட காப்பாற்றுவது கடினம். சாலையில் தூக்கி எறியப்படும் போது மண்டை ஓட்டின் தாக்கத்தினால் மூளை மண்டை ஓட்டின் மீது மோதுகிறது, இதுவே மூளைக்காயங்களுக்குக் காரணமாகிறது” என்றார்.

மேலும், அதிவேகத்துடன், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட்கள் அணியாமல் ஓட்டுவது, சீட்பெல்ட் அணியாமல் ஓட்டுவது, குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பது பற்றிய கவனமின்மை ஆகியவையும் காரணம் என்கிறார் சேவ் லைஃப் தலைவர் பியூஷ் திவாரி.

அதற்காக சீட் பெல்ட், ஹெல்மெட் அணிந்தால் விபத்துக்கள் குறையும் என்று கூறுவதாக நினைக்கக் கூடாது, பலத்த காயங்கள் ஏற்படாமல் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது என்று குளோபல் மருத்துவமனை நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் கே.ஸ்ரீதர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “வார இறுதிகளில்தான் மதுஅருந்தி விட்டு வாகனங்களில் சென்று விபத்துகளை சந்திப்பவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்வது, நடைவாசிகள் செல்போனில் பேசிய படியே நடந்து செல்வது, சாலையில் உள்ள மேடு பள்ளங்கள், ஆகியவற்றினல் விபத்துகள் ஏற்படுகின்றன, ஆனால் ஹெல்மெட், சீட் பெல்ட்களினால் காயங்களை தவிர்க்கலாம்” என்றார்.

அதே போல் கார்களில் எக்காரணத்தை முன்னிட்டும் முன் சீட்டில் குழந்தைகளை அமர அனுமதிக்கக் கூடாது பின் சீட்டில் அமர்ந்தாலும் அவர்களுக்கும் சீட் பெல்ட் அணிவிக்க வேண்டும் என்கிறார் டாக்டர் ஸ்ரீதர்.

2013-ம் ஆண்டிலும் சென்னை சாலை விபத்துகளில் நல்ல நிலையில் இல்லை. தேசிய குற்றப்பதிவேடுகள் கழகப் புள்ளிவிவரங்களின் படி நகரங்களில் 9705 விபத்துகளுடனும், இதில் 8700 காயங்கள் மற்றும் 1,247 விபத்து மரணங்களுடனும் சென்னை முன்னிலையே வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x