

சென்னை ஐஐடியில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்புக்கு ஐஐடி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்த தடை கருத்துரிமைக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அம்பேத்கர்-பெரியார் பெயரில் இயங்கும் அமைப்புக்கு தமிழ்நாட்டில் இயங்கும் ஐ.ஐ.டி.யில் தடை விதிக்கப்பட்டுள்ளது தமிழகத்துக்கே அவமானமாகும்.
இச்செயலுக்காக மத்திய அரசிற்கும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் ஐஐடி நிர்வாகத்துக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
உடனடியாக இந்த தடையை விலக்கி கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன். தேவைப்பட்டால் எஸ்டிபிஐ கட்சி போராட்டங்களை நடத்தும் என்பதையும், மாணவர்களுக்கு என்றும் துணை நிற்கும்'' என்று தெகலான் பாகவி கூறியுள்ளார்.