

சென்னை பாலவாக்கம் வி.ஜி.பி. லே-அவுட்டில் வசிப்பவர் தமிழரசி (40). நேற்று முன்தினம் இரவில் இவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அனைவரும் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து இருந்தனர். அப்போது வீட்டின் கீழ் தளத்தில் வேலைக்கார பெண் மட்டும் இருந்தார். கையில் தாம்பூலத்தட்டுடன் இருந்த அவர்கள் தமிழரசியை கூப்பிடுங்கள், திருமண அழைப் பிதழ் வழங்க வேண்டும் என்றனர். உடனே அவர் மாடியில் இருந்த தமிழரசியை அழைத்துவந்தார்.
இந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் அவரை மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கொடுக்கும்படி கேட்டனர். அவர் கொடுக்க மறுக்கவே, செயின் களை பறிக்க முற்பட்டனர். ஆனால் இரு கைகளாலும் செயின் களை பிடித்துக்கொண்ட தமிழரசி கொள்ளையர்களுடன் போரா டினார். அப்போது வேலைக்கார பெண் தெருவில் இறங்கி ‘திருடன் திருடன்’ என்று சத்தம்போட்டார். உடனே ஒரு கொள்ளையன் தமிழரசியின் கைகளில் கத்தியால் வெட்டி 25 சவரன் செயின்களை பறிக்க, 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
சந்தேகத்தின்பேரில் 2 பேரை பிடித்து நீலாங்கரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.