Published : 05 May 2015 07:22 AM
Last Updated : 05 May 2015 07:22 AM

இந்தியாவில் 5 முதல் 10% குழந்தைகள் ஆஸ்துமா நோயால் பாதிப்பு

இந்தியாவில் 5 முதல் 10 சதவீதம் குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக இந்திய குழந்தை மருத்துவர்கள் (சென்னை கிளை) செயலாளர் டாக்டர் சோமந்தரம் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை (இன்று) உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மே மாதம் முழுவதும் ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஆஸ்துமா நோயால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக உலக அளவில் ஆஸ்துமாவால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக இந்திய குழந்தை மருத்துவர்கள் குழுமம் (சென்னை கிளை) செயலாளர் டாக்டர் சோமந்தரம் கூறியதாவது:

உலகில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் ஆஸ்துமாவால் குழந்தைகள் பாதிக்கப்படுவது 5 சதவீதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் 5 முதல் 10 சதவீதம் குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயரும் குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. ஆஸ்துமா தொற்று நோய் இல்லை. மூச்சு விடுவதில் சிரமம், மூச்சு வாங்குதல், இருமல், அடிக்கடி சளிப்பிடிப்பது போன்றவை ஆஸ்துமாவின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் குழந்தைகளுக்கு இருந்தால் உடனடியாக குழந்தைகள் மருத்துவரை சந்தித்து சிகிச்சைப் பெற வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஆஸ்துமா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x