Published : 22 May 2015 08:48 AM
Last Updated : 22 May 2015 08:48 AM

முதலிடத்தை கோட்டைவிட்டது விருதுநகர் மாவட்டம்: 25 ஆண்டு சாதனை 4-வது முறை நழுவியது

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் விருதுநகர் மாவட்டம் .06 சதவீத வித்தியாசத்தில் மாநில அளவில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் தனி மாவட்டமாக 1985-ம் ஆண்டு பிரிக்கப்பட்டது. அப்போது முதல் 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக மாநில தரவரிசைப் பட்டியலில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்று வந்தது.

ஆனால், 2011-12-ம் ஆண்டில் 93.53 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-ம் இடத்துக்கும், 2012-13-ல் 94.93 சதவீத தேர்ச்சி பெற்று 5-ம் இடத்துக்கும் தள்ளப்பட்டது. கடந்த ஆண்டில் 96.55 சதவீத தேர்ச்சி பெற்று 4-ம் இடத்தைப் பெற்றது.

இந்த ஆண்டில் 97.62 சதவீத தேர்ச்சி பெற்று மாநில தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆனாலும், 98.04 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்ற ஈரோடு மாவட்டத்தைவிட .06 சதவீதத்தில் விருதுநகர் மாவட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 333 பள்ளிகளைச் சேர்ந்த 15,223 மாணவர்களும், 15,311 மாணவிகளும் தேர்வு எழுதினர். இவர்களில் 14,765 மாணவர்களும், 15,153 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 96.99. மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.97. ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 97.62.

விருதுநகர் மாவட்டத்தில் 93 அரசு பள்ளிகளும், 47 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 53 மெட்ரிக். பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சிபெற்றுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 1.43 உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று 7 பேர் மாநில அளவில் 2-ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் வென்றுள்ளனர். 497 மதிப்பெண்கள் பெற்று 18 பேர் மாநில அளவில் 3-ம் இடத்தையும் மாவட்ட அளவில் 2-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். 496 மதிப்பெண்கள் பெற்று 29 பேர் மாவட்ட அளவில் 3-ம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் ஆங்கிலத்தில் 14 பேரும், கணிதத்தில் 807 பேரும், அறிவியலில் 5,420 பேரும், சமூக அறிவியலில் 2,246 பேரும் என மொத்தம் 8,487 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மாநில, மாவட்ட அளவில் சிறப் பிடங்களைப் பெற்ற மாணவ, மாண விகளுக்கு மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராம் வாழ்த்துத் தெரிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x