Published : 08 May 2015 09:05 PM
Last Updated : 08 May 2015 09:05 PM

தமிழகத்துக்கு நிதி ஆயோக் மூலம் கூடுதல் நிதி ஒதுக்குங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம்

தமிழகத்துக்கு ‘நிதி ஆயோக்’ வாயிலாக வழங்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும்’ என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய வரி வருவாய் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் நிதி மிகவும் குறைந்துவிட்டது. முந்தைய 13 வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி தமிழகத்துக்கு மத்திய வரி வருவாய் தொகுப்பில் இருந்து 4.969 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியானது 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைக்குப் பின் 4.023 சதவீதமாக குறைந்துவிட்டது. 14-வது நிதி ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் தமிழகத்துக்கு கடும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கான வரி வருவாய் நிதி பகிர்ந்தளிப்பில் தமிழகத்துக்கு மிக குறைந்த அளவாக 19.14 சதவீதம் நிதியே அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்துக்கு பெரும் இழப்பு. ஆனால், தமிழகம் போன்ற இதர மாநிலங்கள் அதிக நிதியை பெற்றுள்ளன. 1971-ம் ஆண்டின் மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு நிதி ஒதுக்கி இருப்பது தமிழகத்துக்கு பாதகமானது.

தமிழகம் நிதி நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்தபோது அது அங்கீகரிக்கப்படவும் இல்லை; வருவாய் இழப்புக்கான மானியமும் கிடைக்கவில்லை. இது தமிழகம் போன்று நிர்வாகத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் நிர்வாகத்தை முழுமையாக சீர் குலைப்பதாக உள்ளது.

மத்திய வரி வருவாய் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கான பங்கு 1.59 லிருந்து 1.69 சதவீதமாக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. 13- வது நிதி ஆணைய காலத்தில் தமிழகத்துக்கான சிறப்பு திட்ட மானியம் வழங்கப்படாவிட்டாலும் ரூ.4669 கோடி நிதி கிடைத்தது. ஆனால் நிதி ஆணையத்தின் இந்த முடிவால் தமிழகத்துக்கு ரூ.6000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியும் தற்போது குறைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்துக்கு கூடுதல் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேலும், பெட்ரோல், டீசல் விற்பனயில் லிட்டருக்கு ரூ.4 சிறப்புவரி மற்றும் செல்வ வரி நீக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உதவி பெறும் காவல்துறை நவீனமாக்கல் திட்டம் , மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட 12 திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. இது தவிர, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், துாய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட 13 முக்கிய தேசிய திட்டங்களுக்கு மாநில அரசுகளின் பங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது மாநில அரசுகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய நிதி நிலை அறிக்கையில் ‘நிதி ஆயோக்’ ஒப்புதல் அளித்துள்ள திட்டங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிதி ஆயோக் ஒப்புதல் அளித்த திட்டங்களுக்கான தமிழத்துக்கான பங்கை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஆழ்கடல் மீன்பிடித்தல், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், மோனோ ரயில் திட்டம் போன்ற திட்டங்களுக்கு நிதி அதிகளவில் தேவைப்படுகிறது. இத்திட்டங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்க நிதி ஆயோக் அமைப்புக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x