Published : 27 May 2015 07:29 AM
Last Updated : 27 May 2015 07:29 AM
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் புகைப்பழக்கத்தால் இரு கால்களுக் கும் செல்லும் ரத்தக்குழாய்கள் அடைப்பால் 6 மாதமாக அவதிப்பட்ட தொழிலாளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
வடசென்னையை சேர்ந்தவர் ராகியப்பன் (54). கூலித் தொழிலாளி. இவரது வலது கால் கட்டை விரலில் அடிபட்டதால், அந்த பகுதி கருப்பு நிறமாக மாறியிருந்தது. வலியும் அதிகமாக இருந்ததால், சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், இதயத்தில் இருந்து கால்களுக்கு செல்லும் 2 ரத்தக் குழாய்களிலும் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை துணைத் தலைவர் டாக்டர் என்.தரன், உதவி பேராசிரியர் டாக்டர் கே.ஜெயச் சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் நவீன கருவியின் உதவியுடன் நோயாளியின் இருபக்க இடுப்பு பகுதியில் ஊசி துவார துளையிட்டு அதன்வழியாக சிறிய கருவியின் மூலம் பலூன் (ஆஞ்சியோபிளாஸ்டி) ஒன்றை உள்ளே செலுத்தி ரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கினர். அதன் பிறகு மீண்டும் அடைப்பு ஏற்படாமல் இருக்க ரத்தக் குழாய்களில் ஸ்டென்ட் கருவியை பொருத்தினர். இந்த சிகிச்சைக்கு பிறகு அவருடைய கட்டை விரலின் காயம் குணமாகி, வலியும் நீங்கியது.
இது தொடர்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் டாக்டர் பொ.கார்குழலி, டாக்டர் தரன், டாக்டர் கே.ஜெயச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:
இதயத்தில் இருந்து வரும் ரத்தக்குழாய் உடலில் பல்வேறு உறுப்புகளுக்கு ரத்தத்தை விநியோகம் செய்கிறது. இந்த ரத்தக்குழாய் வயிற்றுக்கு கீழே இரண்டாக பிரிந்து, இரு கால்களுக்கும் செல்கிறது. இவருக்கு புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால், இரு கால்களுக்கு செல்லும் ரத்தக் குழாய்களிலும் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கால்களில் ரத்த ஓட்டம் தடைபட்டது. இதனை அப்படியே விட்டிருந்தால் முட்டிக்கு மேலே 2 கால்களையும் எடுக்க வேண்டியதாகி இருக்கும். கால்களுக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால், வயிற்றை திறந்து கால்களுக்கு ரத்தம் செல்வதற்காக செயற்கை ரத்தக் குழாய்கள் பொருத்தப்படும். இதுபோன்ற அறுவை சிகிச்சை மிகவும் ஆபத்தானது. எனவே இவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்து ரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி ஸ்டென்ட் பொருத்திவிட்டோம். ரத்தக் குழாய்கள் அடைப்பால் 6 மாதமாக அவதிப்பட்டு வந்த தொழிலாளி தற்போது பூரணமாக குணமாகிவிட்டார். சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டால், இவர் வாழ்நாள் முழுவதும் பிரச்சினை இல்லாமல் வாழ முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT