Last Updated : 18 May, 2015 08:21 AM

 

Published : 18 May 2015 08:21 AM
Last Updated : 18 May 2015 08:21 AM

சிதம்பரம் ஆதரவாளரை கட்சியை விட்டு நீக்கக் கோரிக்கை: ப.சிதம்பரம் - இளங்கோவன் இடையே மீண்டும் மோதல் வலுக்கிறது

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இடையே மீண்டும் மோதல் வலுத்துள்ளது.

ப.சிதம்பரம் ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என இளங்கோவன் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

கடந்த நவம்பர் 2-ம் தேதி இளங்கோவன் மாநிலத் தலைவ ரானது முதல் அவருக்கும், ப.சிதம்பரத்துக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.

ஒரு கட்டத்தில் உங்களை ஏன் கட்சியை விட்டு நீக்கக் கூடாது எனக் கேட்டு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பினார்.

காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட இளங்கோவன், இன்னொருவரும் வாரிசுடன் விலகினால் காங்கிரஸுக்கு விமோசனம் ஏற்படும் என்றார்.

அதனைத் தொடர்ந்து ப.சிதம்பரமும், இளங்கோவனும் சோனியா, ராகுல் காந்தியிடம் மாறிமாறி புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து சமரச முயற்சியாக கடந்த ஏப்ரல் 18-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் சிதம்பரம் ஆதரவாளர்கள் இளங்கோவனை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது இரு தரப்பினரும் தங்களது தவறுகளுக்கு பரஸ்பரம் வருத்தம் தெரிவித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் சத்தியமூர்த்தி பவனில் ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற்ற அம்பேத்கர் 125-வது பிறந்த நாள் விழாக் குழு கூட்டத்தில் இளங்கோவனுடன் ப.சிதம்பரமும் கலந்து கொண்டார். இதனால் இரு தரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், காங்கிரஸுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என மாநில பொதுச்செயலாளர்கள் எம்.ஜோதி, கே.பாலசுப்பிரமணியன், கே. தணிகாசலம், டி. செல்வம் ஆகியோர் இளங்கோவனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து எம்.ஜோதி யிடம் கேட்டபோது, “கோவை செல்வராஜ் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவாக வேலை செய்தவர். இப்போது மீண்டும் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு காங்கிரஸ் மீது களங்கம் கற்பித்துள்ளார். மாநிலத் தலைவர் இளங்கோவனுக்கு எதிராகப் பேசி வருகிறார். எனவே, அவரை கட்சியை விட்டு நீக்க கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.

இது தொடர்பாக கோவை செல்வராஜிடம் கேட்டபோது, “காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்குப் பதிலாக, திமுகவுக்கு ஆதரவாக இளங்கோவன் செயல்பட்டு வருகிறார். அதிமுக அரசின் ஊழல்கள் பற்றி தினமும் பேசுபவர், திமுகவின் 2ஜி ஊழல் பற்றி பேசுவதில்லை. 42 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் எனக்கு இதனை கேட்கும் உரிமையில்லையா?” என்றார்.

கோவை செல்வராஜை கட் சியை விட்டு நீக்க இளங்கோவன் ஆதரவாளர்கள் பகிரங்கமாக கோரிக்கைவிடுத்திருப்பது ப.சிதம்பரம் ஆதரவாளர் களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x