Published : 20 May 2015 08:22 AM
Last Updated : 20 May 2015 08:22 AM

மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தத்தால் சென்னை மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்க வாய்ப்பு

மெட்ரோ ரயில் பொது சட்டம், 2013-ல் மத்திய அரசு மேற்கொண்டுள்ள புதிய திருத்தம் காரணமாக கோயம் பேடு-ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

டெல்லியில் உள்ள மாண்டி ஹவுஸ் - ஐடிஒ இடையே மெட்ரோ ரயில் சேவைக்காக பாதை அமைக் கப்பட்டுள்ளது. ஆனால், இது ஒரு வழிப் பாதையாக இருப்பதால் மெட்ரோ ரயில் பொதுச் சட்டம், 2013-ன் படி அவ்வழித்தடத்தில் ரயில் களை இயக்க பாதுகாப்பு ஆணை யர் அனுமதி வழங்கவில்லை.

இதனால் கடந்த ஜனவரியில் பணி பூர்த்தி அடைந்த பிறகும் இதுநாள் வரை அவ்வழித் தடத்தில் ரயில்களை இயக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ரயில்வே பாதுகாப்பு துறை ஆணை யர், மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர், டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஆகியவற்றுடன் தொடர் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, ஒரு வழிப் பாதை யிலும் மெட்ரோ ரயில்களை இயக்கு வது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மெட்ரோ ரயில் பொதுச் சட்டம், 2013-ல் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில், தற்போது கோயம்பேடு-ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் பாதையில் அசோக்நகர்-ஆலந்தூர் இடையே ரயில்கள் திரும்பி வருவதற்கு இருவழிப் பாதைகளையும் இணைக்க இணைப்புப் பாதை அமைக்கப்படாததால் ஒரு வழிப் பாதையில் ரயில்களை இயக்க பாதுகாப்பு ஆணையரின் அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் காரணமாக, இனி அசோக்நகர்-ஆலந்தூர் இடையே ஒருவழிப் பாதையில் ரயில்களை இயக்க முடியும். இதன் காரணமாக, விரைவில் கோயம்பேடு-ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x