Published : 29 May 2015 08:38 AM
Last Updated : 29 May 2015 08:38 AM
தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சிக்கு முடிவு கட்ட புதிய கூட்டணி அமைக்கும் முயற்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழகத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக என ஒரு கட்சி ஆட்சியே நடந்து வருகிறது. 1967-க்குப் பிறகு திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வேறு ஒரு கட்சியோ, கூட்டணியோ ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.
எனவே, கூட்டணி ஆட்சிக்காக தமிழகத்தில் புதிய அணியை உருவாக்க வேண்டும் என திருமாவளவன் தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறார். இதற்காக கடந்த 14-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
அதன் தொடர்ச்சியாக அக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனுடன் நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையின்போது, மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வசிங், க.கனகராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து.ரவிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்பு குறித்து ‘தி இந்து’விடம் திருமாவளவன் கூறியதாவது:
தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சியே நீடிப்பதால் விளிம்பு நிலை சமுதாய மக்களுக்கு ஆட்சி அதிகாரம் என்பது கனவாகவே இருந்து வருகிறது. ஒரு சில எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளோடு திருப்தி கொள்ள வேண்டியிருக்கிறது.
1977-ல் கூட்டணி ஆட்சி என்ற கொள்கையுடன் ஜனதா கட்சி பெயரில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டன. இதனால் முதல்முறையாக இந்தியாவில் கூட்டணி ஆட்சி அமைந்தது. அதுபோல தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி என்ற லட்சியத்துடன் புதிய கூட்டணி அமைய வேண்டும்.
இதற்காக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற தலைப்பில் வரும் ஜூன் 9-ம் தேதி சென்னையில் கருத்தரங்கம் நடத்தவிருக்கிறோம். இதில் பங்கேற்க திமுக, அதிமுக, பாஜக, பாமக தவிர மற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க இருக்கிறோம். விஜயகாந்த், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜி.கே.வாசன் ஆகியோரையும் நேரில் சந்தித்து அழைக்க இருக்கிறேன்.
இது திமுக, அதிமுகவுக்கு எதிரான முயற்சி அல்ல. கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டால் திமுக, அதிமுக அல்லது தேமுதிக தலைமையில் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறோம் என்றார் திருமாவளவன்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் கூட்டணி ஆட்சி குறித்த கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் பங்கேற்கும். நவீன பொருளாதாரக் கொள்கைகள், மதவாதம், தீண்டாமைக் கொடுமை, ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக இணைந்து செயல்படுவது குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் திருமாவளவனுடன் விரிவாக பேசினோம். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை அக்கட்சி புறக்கணித் துள்ளது. அங்கு போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து ஜூன் 3-ம் தேதி நடைபெறும் மாநிலக் குழு கூட்டத்தில் முடிவு செய்வோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT