Published : 18 May 2014 11:30 AM
Last Updated : 18 May 2014 11:30 AM

புதுவை ஆளுநர் கட்டாரியா விரைவில் மாற்றம்

மத்தியில் ஆட்சி மாற்றம் காரணமாக புதுவை துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா விரைவில் மாற்றப்படுவார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் நேரடி ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. பிராந்தியப் பகுதிகளாக காரைக்கால், மாஹே, ஏனாம் போன்றவை உள்ளன. புதுவை முதல்வர், அமைச்சர்கள் என இருந்தாலும் யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநர் என அழைக்கப்படும் கவர்னருக்குத்தான் அதிக அதிகாரம் உண்டு. அரசு அதிகாரிகள் மாற்றம், நிதி விவகார ஒப்புதல் உள்ளிட்ட பல விஷயங்களிலும் துணைநிலை ஆளுநரை முதல்வர் எதிர்பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் கவர்னர் பதவியில் மத்திய ஆட்சியில் இருக்கும் கட்சியை சேர்ந்தவர்களை நியமிப்பதே வழக்கம். அந்த வகையில் தற்போதைய புதுச்சேரி கவர்னர் வீரேந்திர கட்டாரியாவும் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்தவர். ரங்கசாமிக்கு எதிராக செயல்படுவதற்காகவே நாராயணசாமி பரிந்துரையில் மத்திய அரசு அவரை அனுப்பி வைத்தாக ரங்கசாமி ஆதரவாளர்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வந்தனர். முதல்வருக்கும் கவர்னருக்கும் இடையே மோதலும் வெடித்தது.

இந்த சூழ்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும் முதல்வர் ரங்கசாமி ஆதரிக்கும் பா.ஜ.க. தலைமையில் அரசு அமைய இருப்பதாலும் புதுச்சேரியில் கவர்னர் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி கூறுகையில், “புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்த இக்பால் சிங் அனைத்து வகையிலும் முதல்வர் ரங்கசாமியுடன் இணைந்து செயல்பட்டதையடுத்து அவரை மாற்ற காங்கிரஸார் முற்பட்டனர்.

இதனால், வீரேந்திர கட்டாரியா புதுவை ஆளுநராக 10.7.13ல் பொறுப்பேற்றார். ஆட்சி அதிகாரத்தில் நேரடியாக தலையிட்டதோடு அதிகாரிகளை மாற்றுவதில்கூட முதல்வருக்கு பிரச்சினை ஏற்பட்டது. தற்போது மத்தியில் ஆட்சி மாறியுள்ளது. நாங்கள் கூட்டணி கட்சியாக இருப்பதால் நிச்சயம் ஆளுநர் மாற்றம் நடக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x