தமிழகத்தில் கடந்த ஓராண்டில்105 கவுரவ கொலைகள் நடைபெற்றுள்ளன: கிருஷ்ணசாமி பேட்டி

தமிழகத்தில் கடந்த ஓராண்டில்105 கவுரவ கொலைகள் நடைபெற்றுள்ளன:  கிருஷ்ணசாமி பேட்டி
Updated on
1 min read

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 105 கவுரவக் கொலைகள் நடைபெற்றுள்ளன என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய தமிழகம் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் அரசியல் சார்பற்ற மக்கள் இயக்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இந்த மக்கள் இயக்கம் மூலம் கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகள், மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களிலிருந்து தமிழகத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். அதன் அடிப்படையில் நாளை திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க உள்ளேன்.

தமிழகத்தில் ஒரு சதவீதம் மட்டும்தான் சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன. இதைக் கூட தாங்கிக்கொள்ள முடியாத குடும்ப உறுப்பினர்கள் கூலி ஆட்களை வைத்து கவுரவக் கொலைகளை செய்கின்றனர். கடந்த ஓராண்டில் 150 கவுரவக் கொலைகள் நடைபெற்றுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in