Published : 22 May 2015 01:12 PM
Last Updated : 22 May 2015 01:12 PM

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஈரோடு மாணவிகள் மாநில முதலிடம்

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இரு மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தலா 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இவர்கள் இருவரும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ஈரோடு மாவட்டத்தில் 342 பள்ளிகளில் 30 ஆயிரத்து 14 பேர் தேர்வு எழுதினர். இதில், 29,425 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் 98.04 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 97.5 சதவீத தேர்ச்சி பெற்று மாநில முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டம், கோபி ஸ்ரீவித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ். தீப்தி மற்றும் புன்செய் புளியம்பட்டி எஸ்.ஆர்.சி.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.எஸ்.ஜனனி ஆகியோர் தலா 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றனர். இவர்கள் இருவரது குடும்பத்தினரும் விவசாய தொழிலை செய்து வருகின்றனர்.

மாணவி ஜனனி கூறும்போது, “ஆட்சியராகி ஏழை மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக” கூறினார். சத்தியமங்கலத்தை அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்த எஸ்.தீப்தி கூறும்போது, “8-ம் வகுப்பு முதல் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறேன். ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி ஊக்கப்படுத்தியதால் முதல் மதிப்பெண் பெற முடிந்தது. மருத்துவராக விரும்புகிறேன்” என்றார்.

மேலும், 498 மதிப்பெண் பெற்று 6 மாணவர்கள் இரண்டாமிடமும், 497 மதிப்பெண் பெற்று 35 மாணவர்கள் மாநில அளவில் மூன்றாமிடத்தை பிடித்துள்ளனர். மாநில அளவில் தேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் சக மாணவிகள் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x