Published : 18 May 2015 07:34 AM
Last Updated : 18 May 2015 07:34 AM
இலங்கையில் 2009 ம் ஆண்டு லட்சக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதை நினைவு கூரும் வகையில் மே 17 இயக்கம் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் நாசர் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற் றனர்.
இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் லட்சக்கணக்கான தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதன் 6-ம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்தை மே 17 இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டம் சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் நாசர், கவிஞர் காசி ஆனந்தன், கோவை ராமகிருஷ்ணன் உட்பட 500-க்கும் அதிகமானவர்கள் பங்கேற்று மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இக்கூட்டத்தை ஏற்பாடு செய்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “இலங்கையில் தனி தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி கிடைக்க வேண்டும். அந்த படுகொலைக்கு காரணமாக இருந்த இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மீது விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை எடுத்துக்கூறும் வகையில் மணற்சிற்பங்கள் வடிக்கப்பட்டிருந்தன. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமிருந்தது. கடற்கரைக்கு வந்தவர்கள் பலர் இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT