Last Updated : 08 Apr, 2015 10:20 AM

 

Published : 08 Apr 2015 10:20 AM
Last Updated : 08 Apr 2015 10:20 AM

வங்கிகளுக்கு சனிக்கிழமை முழுநாள் விடுமுறை: போலி சுற்றறிக்கையால் ஊழியர்கள் குழப்பம்

வங்கிகளுக்கு மாதத்தின் 2 மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் முழுநாள் விடுமுறை என்பது அமலுக்கு வந்துவிட்டதாக வெளியான சுற்றறிக்கை வங்கி ஊழியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊதிய உயர்வு, வங்கி அதி காரிகள் மற்றும் ஊழியர்களின் பணிச்சுமை குறைப்பு, காலிப் பணி யிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் தொழிற்சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டங்களை அறிவித்தன.

இது தொடர்பாக இந்திய வங்கி கள் சங்கத்துக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே பல கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக கடந்த பிப்ரவரி 23-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் சங்கங்களின் முக்கியமான சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. குறிப் பாக ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை விட இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக் கொண்டது. அடுத்த 3 மாதங் களுக்குள் இதனை நடைமுறைக்கு கொண்டு வரவும் அப்போது ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த சூழலில் வங்கிகளுக்கு சனிக்கிழமை முழுநாள் விடுமுறை திட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக வெளியான ஒரு சுற்றறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தின் பெயரில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி இந்த சுற்றறிக்கை வெளியானது. மேலும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான செய்திகள் பரவின. இது அதிகாரபூர்வமான அறிவிப்பா இல்லையா என்ற குழப்பம் வங்கி ஊழியர்களிடையே நிலவுகிறது.

இந்நிலையில் இந்த சுற்ற றிக்கை போலியானது எனவும், இதுபோன்ற எந்த சுற்றறிக்கை யையும் வங்கி நிர்வாகங்கள் வெளியிடவில்லை எனவும் தொழிற் சங்கங்கள் விளக்கமளித்துள்ளன.

இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் தே.தாமஸ் ஃபிராங்கோ கூறியதாவது:

கடந்த பிப்ரவரி 23-ம் தேதி இந்திய வங்கிகள் சங்கத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி மாதந்தோறும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை விடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து இந்திய வங்கிகள் சங்கம் எடுத்து வருகிறது. இந்த பணிகள் முடிய சற்று கால அவகாசம் தேவைப்படும். எனினும் அதற்குள் யாரோ போலியான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளனர். ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்பதால் யாரோ வேண்டுமென்றே இதனை வெளியிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இது பற்றி வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார் ஃபிராங்கோ.

இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:

சில விஷமிகள் இவ்வாறு வங்கி நிர்வாகத்தின் பெயரால் போலி சுற்றறிக்கைகளை வெளியிடுகின்றனர். அவர்கள் மீது சைபர் குற்றம் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கிகளுக்கு சனிக்கிழமை விடுமுறையை அமலுக்கு கொண்டு வருவதற்கு முன்பாக மாற்று முறை ஆவணச் சட்டத்தில் (Negotiable Instruments Act) தேவையான திருத்தம் உள்பட நிர்வாக ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் பல பணிகளை செய்ய வேண்டியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் எல்லாம் முடிந்த பிறகு, மாதத்தில் 2 மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் முழுநாள் விடுமுறை என்பது விரைவிலேயே அமலுக்கு வரும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x