Published : 09 May 2014 09:10 AM
Last Updated : 09 May 2014 09:10 AM

ஜாஹீர் உசேனின் இ-மெயில் முகவரியை முடக்கியது பாக்.

ஜாஹீர் உசேன் கைது செய்யப்பட்ட மறுநாள் அவரது இ-மெயில் முகவரியை பாகிஸ் தானில் இருந்து முடக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

உளவுத்துறை தகவலையடுத்து இலங்கையை சேர்ந்த ஜாஹீர் உசேன் என்பவர் கடந்த 29-ம் தேதி சென்னை மண்ணடியில் கைது செய்யப்பட்டார்.

பிடிபட்ட ஜாஹீர் உசேன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளி என்றும், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 5-ம் தேதி ஜாஹீர் உசேன் ஆஜர்படுத்தப் பட்டார். அவரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.

போலீஸ் காவல் முடிந்து வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட் நீதிபதி சிவசுப்பிரமணியன் முன்பு ஜாஹீர் உசேன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 13-ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணப்பன், க்யூ பிரிவு எஸ்.பி. பவானீஸ்வரி ஆகியோர் தலைமையில் 3 நாட்கள் ஜாஹீர் உசேனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம்தான் ஜாஹீர் உசேனின் முதல் குறி. அண்ணா மேம்பாலம் உட்பட அமெரிக்க தூதரகத்தை சுற்றிலும் உள்ள சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு பலமாக இருக்கும். இதனால் காரில் சென்றவாறு தூதரகத்தை பலமுறை புகைப்படம் எடுத்திருக்கிறார் ஜாஹீர்.

பின்னர் தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் கார்களின் விவரங்கள், அவற்றின் புகைப்படங்களை எடுத்து இலங்கையில் உள்ள ஓர் இ-மெயில் முகவரிக்கு அனுப்பியுள்ளார். அந்த இ-மெயில் முகவரியை வைத்து ஆய்வு செய்தபோது, அதன் சர்வர் பாகிஸ்தானில் இருப்பது தெரிந்தது. இந்நிலையில் ஜாஹீர் கைது செய்யப்பட்ட மறுநாள் அவரது இ-மெயில் முகவரி முடக்கப்பட்டிருந்தது. இதை யார் முடக்கியது? என்று ஆராய்ந்தபோது அதுவும் பாகிஸ்தானில் இருந்தே செய்யப்பட்டிருந்தது என்றார்.

பாக். தூதர்கள் மீது வழக்கு

ஜாகீர் உசேன் தனது வாக்கு மூலத்தில், "இலங்கையில் உள்ள பாகிஸ்தான் துணை தூதரக அதிகாரிகள் சித்திக், பாஸ் (எ) ஷா ஆகியோருக்காகத்தான் வேலை செய்ததாகவும், அவர்களுக் குத்தான் உளவு சொன்னதாகவும்" தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் க்யூ பிரிவு போலீஸார் பாகிஸ்தான் துணை தூதரக அதிகாரிகள் சித்திக், பாஸ் (எ) ஷா ஆகியோரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் (FIR) சேர்த்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x