Published : 08 Apr 2015 10:23 AM
Last Updated : 08 Apr 2015 10:23 AM

சென்ட்ரல் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கு ஓராண்டு ஆகியும் துப்பு துலங்கவில்லை: தெலங்கானாவுக்கு விரைந்துள்ள தமிழக போலீஸார்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் ஓராண் டாகியும் துப்புத் துலங்கவில்லை. இதற்கிடையே, தெலங்கானாவில் சிமி அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பதைத் தொடர்ந்து, தமிழக போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு மே 1-ம் தேதி காலை பெங்களூரில் இருந்து குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்தது. காலை 7.15 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் ரயிலின் எஸ்-4 மற்றும் எஸ்-5 பெட்டிகளில் ஒன்றன்பின் ஒன்றாக 2 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர்.

இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தேசியப் புலனாய்வு அமைப்பு (NIA) விசாரணைக்கு உத்தரவிடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த தமிழக அரசு, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழக போலீஸார், பெங்களூரு சென்று விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகளை நெருங்கிவிட்ட தாகவும், விரைவில் விசாரணை முடிவுக்குவரும் என்றும் தெரிவித் தனர். ஆனால், சம்பவம் நடந்து 11 மாதங்களாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்பட வில்லை.

இந்நிலையில், தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த மாதம் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், மத்தியப் பிரதேசம் காந்த்வா சிறையில் இருந்து தப்பிய ‘சிமி’ அமைப்பைச் சேர்ந்த விசாரணைக் கைதிகளுக்கு, சென்னையில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்திலும், அதைத் தொடர்ந்து பெங்களூரில் கடந்த டிசம்பரில் நடந்த வெடிகுண்டு சம்பவத்திலும் (இதில் சென்னை பெண் உயிரிழந்தார்) தொடர்பிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. அதனால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகள், குண்டுவெடிப்பு வழக்குகளில் விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அந்த நபர்கள் மீண்டும் குண்டு வெடிப்பை நிகழ்த்தும் அபாயம் உள்ளது என்று தெரிவித்திருந்தார். மத்திய அரசிடமிருந்து கடிதம் வந்திருப்பதை தமிழக உள்துறை வட்டாரங்களும் உறுதிப்படுத்தின. இதைத் தொடர்ந்து தமிழக சிபிசிஐடி போலீஸார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, தெலங்கானா வில் கடந்த சனிக்கிழமை நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் காந்த்வா சிறையில் இருந்து தப்பிய சிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது. அவர்களுக்கு சென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், தமிழக போலீஸார் அங்கு விரைந்திருப்பதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித் தன.

வியாசர்பாடி விபத்து

கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி அதிகாலை 4.55 மணி அளவில், சென்னை சென்ட்ரலில் நிறுத்தப்பட்டிருந்த புறநகர் மின்சார ரயிலை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்று, வியாசர்பாடி நிலையம் அருகே மற்றொரு மின் ரயிலில் மோதச் செய்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கையும் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். 6 ஆண்டுகள் கடந்தும் இந்த வழக்கிலும் இதுவரை துப்பு துலங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x