Published : 01 Apr 2015 11:15 AM
Last Updated : 01 Apr 2015 11:15 AM

பேச்சுவார்த்தை முடிந்ததும் பஸ் ஊழியர்கள் மகிழும் வகையில் நிவாரணம்: சட்டப்பேரவையில் அமைச்சர் உறுதி

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துவருகிறது. இதன் முடிவில், தொழிலாளர்கள் மகிழும் வகையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அ.சவுந்தரராஜன் பேசும்போது, ‘‘அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கடன் ரூ.4 ஆயிரம் கோடியை அரசு தனது கடனாக ஏற்று, போக்குவரத்து தொழிலாளர்களையும், போக்குவரத்து துறையையும் காப்பாற்ற வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:

திமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகத்துக்கு கடன்தான் வழங்கப்பட்டது. இந்த ஆட்சியில் டீசல் மானியமாக ரூ.1800 கோடி தரப்பட்டுள்ளது. மத்திய அரசின் தவறான கொள்கையால் டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவது இல்லை. ஒரு கி.மீ.க்கு 42 பைசா என்று குறைந்த கட்டணம் வசூலிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான்.

2011-ல் இந்த அரசு பொறுப்பேற்றபோது, ரூ.6,150 கோடி கடனில் தத்தளித்த அரசுப் போக்குவரத்துக் கழகம் மூடுவிழா காணும் நிலையில் இருந்தது. இதையடுத்து, போக்குவரத்துக் கழகத்துக்கு போதிய நிதி வழங்கி, மீட்டெடுத்து தேசிய அளவில் 36 விருதுகளில் 12 விருதுகளைப் பெறும் அளவுக்கு போக்குவரத்துக் கழகத்தையும், அதன் தொழிலாளர்களையும் இந்த அரசு பாதுகாத்துள்ளது.

இப்போது ஊதிய உயர்வு தொடர்பாக 4 கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துள்ளது. இதன் முடிவில், அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் மகிழக்கூடிய வகையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும்.

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x