தமிழக உள் மாவட்டங்களில் மழை பெய்யும்: ரமணன் தகவல்

தமிழக உள் மாவட்டங்களில் மழை பெய்யும்: ரமணன் தகவல்
Updated on
1 min read

லட்சத் தீவு மற்றும் கர்நாடக மாநிலம் அருகே நிலவும் காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்ததாவது:

லட்சத் தீவு மற்றும் கர்நாடக மாநிலம் அருகே நிலவிவரும் காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அடுத்த சில நாட்களுக்கு உள் மாவட்டங்களில் மழை பெய்யும். மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கலாம். இதனால் ஒரு சில பகுதிகளில் வெயில் சற்று குறையலாம்.

இன்று (சனிக்கிழமை) காலை வரையான 24 மணி நேரத்தில் பதிவான நிலவரப்படி, அதிகபட்சமாக வால்பாறையில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் 3 செ.மீ., நெல்லை மாவட்டம் ஆயக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், குழித்துறை, நீலகிரி மாவட்டம் தேவலா மற்றும் சேலத்தில் தலா ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in