

தனது நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணை மிரட்டியதாக ‘அப்ரோ’ ஏசுதாஸ் கைது செய்யப்பட்டார்.
கொளத்தூரை சேர்ந்த ஏசுதாஸ் என்பவர் ‘அப்ரோ' என்ற நிறுவனத்தை தொடங்கி அதில் ஏராளமான மகளிர் சுய உதவிக் குழுக்களை இணைத்துக் கொண்டார். குழுவில் உள்ள பெண்களிடம் இருந்து பண வசூல் செய்தும், வங்கிகளில் கடன் பெற்று கொடுப்பதாகவும், தனது நிறுவனத்தில் இருந்தே கடன் கொடுப்பதாகவும் கூறி கோடிக்கணக்கில் பண வசூல் செய்தார்.
இந்நிலையில் அவர், மகளிர் குழுவிடம் இருந்து வசூலித்த பணத்தை மோசடி செய்துவிட்டதாக ஏராளமானவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீஸார் ஏசுதாஸையும், அப்ரோ நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்த தேவி என்ற பெண்ணையும் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தனர். தற்போது இருவரும் ஜாமீனில் உள்ளனர்.
இந்நிலையில் ஏசுதாஸிடம் இருந்து ரூ.25 கோடி பணத்தை தேவி மோசடி செய்துவிட்டதாக, சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து ஏசுதாஸ் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார் என்று எண்ணூர் காவல் நிலையத்தில் தேவி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீஸார் ஏசுதாஸை நேற்று கைது செய்தனர்.