Published : 23 Apr 2015 03:59 PM
Last Updated : 23 Apr 2015 03:59 PM
விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை சிறப்பாக பராமரிக்கும் 5 அரசு பள்ளிகள் உட்பட 15 பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டு சுற்றுச்சூழல் துறை சார்பில் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய பசுமைப் படை இயங்கி வருகிறது. இதில் ஒவ்வொரு பள்ளியிலும் 50 மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
பள்ளியில் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரித்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு, மரக்கன்றுகள் நட்டுவைத்து வளர்த்தல், தூய்மையை பேணுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தேசிய பசுமைப்படையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுபோன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பராமரிப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் பள்ளிகளைத் தேர்வுசெய்து சுற்றுச்சூழல் துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் சுற்றுச்சூழலை சிறப்பாக பராமரித்த நடுவப்பட்டி, கிளவிகுளம் சூலக்கரை, படந்தால் அரசு மேல்நிலைப் பள்ளிகள், பாம்பாட்டி அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரமும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அல்லம்பட்டியிலுள்ள சௌடாம்பிகா மேல்நிலைப் பள்ளி, திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப்பள்ளி, சாட்சியாபுரம் எஸ்.இ.எம்.எஸ்.பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப் பள்ளி, அன்னப்பராஜா மேல்நிலைப் பள்ளி, பிஏ.சி.ஆர். அம்மணி அம்மாள் மேல்நிலைப் பள்ளி, திருவில்லிபுத்தூர் திருஇருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சோழபுரம் பழனியப்பா மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணாபுரம் பி.கே.மேல்நிலைப் பள்ளி, மம்சாபுரம் எஸ்.என்.மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுசெய்யப்பட்ட பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் பரிசுத்தொகை வழங்கப்படும் என மாவட்ட கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT