

கொடைக்கானல் அரசு நூலகத்தில், கடந்த ஓராண்டாக மின்சாரம் இல்லாமல் வாசகர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
கொடைக்கானல் போயட் தியாகராஜன் சாலையில் 1980-ம் ஆண்டு முதல் அரசு நூலகம் செயல்படுகிறது. இந்த நூலகத்தில் 5,200 உறுப்பினர்கள் உள்ளனர். 37 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. தினமும் 400-க்கும் மேற்பட்ட வாசகர்கள் இங்கு புத்தகம் படிக்க வந்து செல்கின்றனர்.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, இந்த நூலகம் செயல்படுகிறது. கடந்த ஓராண்டுக்கு முன் பெய்த கனமழையால் நூலகம் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்தது. அதன்பின், தற்போது வரை இந்த நூலகத்துக்கு மின்சாரம் இல்லை.
அதனால், நூலகத்துக்கு வரும் வாசகர்கள் இருட்டில் அமர்ந்து புத்தகம் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கொடைக்கானலில் மாலை 3 மணிக்கு மேல் மேகங்கள் சூழ்ந்து பொழுது இருட்ட ஆரம்பித்துவிடும் என்பதால் 3 மணிக்குப் பிறகு வாசகர்கள் வருகை குறைந்து விட்டது.
கடந்த ஓராண்டுக்கு முன், தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் படிக்க வந்தனர். தற்போது, மின்சாரம் இல்லாததால் வாசகர் வருகையும் குறைந்து விட்டது. நூலகத்துக்கு மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துக்கு பலமுறை கடிதம் எழுதி விட்டனர். ஆனால், மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிக ளிடம் கேட்டபோது, புதிய மின்கம்பம் வந்துவிட்டது. நூலகத்துக்கு ஓரிரு நாளில் மின் இணைப்பு வழங்கி விடுவோம் என்றனர்.