Published : 31 Mar 2014 12:00 AM
Last Updated : 31 Mar 2014 12:00 AM

ரூ.238 கோடியில் செல்வபுரத்தை உருவாக்கியது திமுக: கோவை அருகே மு.க.ஸ்டாலின் பேச்சு

பொள்ளாச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமியை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கோவை மற்றும் பொள்ளாச்சியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார்.

மு.க.ஸ்டாலின் பேசுகையில், தொண்டாமுத்தூர் பகுதியில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மருத்துவக் காப்பீடு, ரூ.2.25 கோடியில் கட்டிய பாலங்கள், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள், தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயக் கடன்கள் அனைத்துமே மக்களுக்கு பயனளித்து வருகின்றன என்றார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை வாசித்துக் காட்டிய ஸ்டாலின், பால் விலை, பேருந்து கட்டணம் உள்ளிட்டவை அதிமுக ஆட்சியில் கடும் விலையேற்றத்தை எட்டியுள்ளது என்றார்.

குனியமுத்தூரில் ஸ்டாலின் பேசுகையில், 3.5% இடஒதுக்கீட்டை சிறுபான்மையின மக்களுக்கு பெற்றுத் தந்தது திமுகதான். மதச்சார்பற்ற, திடமான ஆட்சி மத்தியில் அமைய திமுக வேட்பாளரை தேர்ந்தெடுங்கள். திமுக ஆட்சியிலேயே ரூ.238 கோடியில் 4 ஆயிரம் வீடுகள் கட்டி கோவை செல்வபுரம் உருவாக்கப்பட்டது.

ஆழியாறு குடிநீர்த் திட்டத்தில் தினமும் கிடைத்த குடிநீர் அதிமுக ஆட்சியில் வாரத்திற்கு ஒருமுறை என்று மாறிவிட்டது என்றார்.

பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, பைந்தமிழ் பாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொண்டாமுத்தூரில் துவங்கி செல்வபுரம், குனியமுத்தூர், குறிச்சி, மலுமிச்சம்பட்டி வழியாக பொள்ளாச்சி சென்றார் ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x